Published : 26 Jan 2024 06:29 AM
Last Updated : 26 Jan 2024 06:29 AM
திருப்பூர்/கோவை: பல்லடம் அருகே தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை மர்ம கும்பல் வெட்டியதில் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
திருப்பூர் மாவட்டம் காமநாயக்கன்பாளையம் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் நேசபிரபு(28).பல்லடம் பகுதியில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளராகப் பணியாற்றி வருகிறார். இவரை கடந்த 2 நாட்களாக மர்ம நபர்கள் சிலர் நோட்டமிட்டு வருவதாக,பல்லடம் மற்றும் காமநாயக்கன் பாளையம் போலீஸாரிடம் நேசபிரபு புகார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் நேசபிரபுவின் வீட்டை நோட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர் வீட்டிலிருந்து காரில் வெளியே வந்த நேசபிரபு, அருகில் உள்ள பெட்ரோல் பங்க் சென்றார். அப்போது 2 கார்களில் வந்த மர்ம கும்பல், நேசபிரபுவின் கை, கால் மற்றும் முகம் உள்ளிட்ட இடங்களில் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பியது. பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அவரை மீட்டு, பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது தொடர்பாக காமநாயக்கன் பாளையம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குற்றவாளிகளைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஐ.ஜி. பவானீஸ்வரி சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதற்கிடையில், பிரவீன்(27), சரவணன்(23) ஆகிய இருவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
ஆடியோ வைரல்: இந்த சம்பவம் நடைபெறு வதற்கு முன் செய்தியாளர் பதைபதைப்புடன் பேசிய ஆடியோவும், போலீஸார் அலட்சியமாக பேசியதும் சமூக வலைதளங்களில் வைரலானது. பலரும் போலீஸாரைக் கண்டித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அதிமுகபொதுச் செயலாளர் பழனிசாமி,முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், இந்த சம்பவத்தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
மேலும், செய்தியாளர் மீதான தாக்குதலை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், திருப்பூர், கோவை உட்பட மாநிலம் முழுவதும் பத்திரிகையாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அமைச்சர்கள் நலம் விசாரிப்பு: கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நேசபிரபுவை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக செய்தி-மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் பார்வையிட்டு, அவரது உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.
தொடர்ந்து மத்திய அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதற்கு இந்த சம்பவமே எடுத்துக்காட்டு. செய்தியாளர்களுக்கு பாது காப்பற்ற சூழல் நிலவுகிறது. சட்டம்- ஒழுங்கை காப்பாற்ற காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றார்.
முதல்வர் நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன், மருத்துவ சிகிச்சையில் உள்ள நேசபிரபுவுக்கு, பத்திரிகையாளர் நல வாரியத்தில் இருந்து ரூ.3 லட்சம் நிதியுதவி அளிப்பதாகவும், சம்பந்தப்பட்ட காவல் நிலையஆய்வாளர் ரவியை காத்திருப் போர் பட்டியலில் வைக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT