

புதுச்சேரி: புதுச்சேரி அரசு மருத்துவமனையில் உதவி சப் இன்ஸ்பெக்டருக்கு தரையில் படுக்கை வைத்து சிகிச்சை தரப்பட்ட நிலையில், அமைச்சரின் தலையீடு காரணமாக படுக்கைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
புதுவை காவல் துறையில் ரிசர்வ் பட்டாலியனில் தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் அமர்நாத் ( வயது 37 ). அண்மையில் ( ஏ.எஸ்.ஐ ) உதவி சப் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு பெற்றார். இன்னும் உதவி சப் இன்ஸ்பெக்டராக பணியில் சேராத நிலையில் கடும் காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அவருக்கு படுக்கை வழங்கப்படவில்லை. தரையில் படுக்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதுவும் தனது வீட்டில் இருந்து கொண்டு வந்த படுக்கை விரிப்பில் தான் படுத்திருந்தார். இதனை மருத்துவமனைக்கு வந்தவர்கள் பார்த்து புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ளனர். இதனை அறிந்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், உடனடியாக சுகாதாரத் துறை இயக்குனரை தொடர்பு கொண்டுள்ளார். இதையடுத்தே அமர்நாத்துக்கு படுக்கை வழங்கப்பட்டுள்ளது. புதுவை காவல் துறை அதிகாரிக்கே 2 நாள் இழுத்தடிப்புக்கு பிறகு அமைச்சரின் தலையீட்டால் படுக்கை அளிக்கப்பட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது.