Published : 18 Feb 2018 02:57 AM
Last Updated : 18 Feb 2018 02:57 AM

சாலைகளை பராமரிக்காவிட்டால் சுங்கச்சாவடி நிறுவனங்களின் ஒப்பந்தம் நிறுத்தப்படும்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எச்சரிக்கை

நெடுஞ்சாலைகளை தொடர்ந்து பராமரிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட சுங்கச்சாவடி நிறுவனங்களின் ஒப்பந்தம் நிறுத்தம் (தற்காலிக நிறுத்திவைப்பு) செய்யப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் 4,974 கி.மீ. நீளத்துக்கு நெடுஞ்சாலைகள் உள்ளன. இவற்றில் 2,724 கி.மீ. சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. மீதமுள்ளவை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. தமிழகத்தில் உள்ள 44 சுங்கச்சாவடிகளில் 22 தனியார் நிறுவனங்களாலும், 22 தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தாலும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

நெடுஞ்சாலைகளில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. ஆனால், சுங்கச்சாவடிகளில் கட்டணம் மட்டுமே வசூலிக்கும் சில தனியார் நிறுவனங்கள், போதிய அளவில் சாலைகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில்லை என புகார் எழுந்துள்ளது.

சில இடங்களில் சாலைகள் சிதலமடைந்து காணப்படுவதால் வாகனங்கள் விபத்துகளில் சிக்குகின்றன. குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகள் மேடு, பள்ளமாக இருப்பதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின்கீழ் வரும் சாலைகளில் சில இடங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என புகார் வந்துள்ளது.

சாலைகள் மேடு பள்ளங்களாக இருப்பதாகவும், சுங்கச்சாவடிகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்றும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். நெடுஞ்சாலைகளை முறையாக பராமரிக்க வேண்டும் என தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளோம்.

சாலை பழுதுகளை சீரமைக்காவிட்டால், 60 நாட்களுக்கு பிறகு சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ஒப்பந்தத்தை தற்காலிக நிறுத்தம்செய்வது போன்ற நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x