

சென்னை: ராமர் கோயில் திறப்பு விழா தொடர்பான நிகழ்வை தனியார் கோயில்கள், திருமண மண்டபங்களில் நேரலை செய்ய போலீஸாரின் அனுமதி தேவையில்லை என்றும், அதேநேரம் அறநிலையத்துறை கோயில்கள் என்றால் முன்கூட்டியே தகவல் தெரிவித்து நேரலை செய்யலாம் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்வை முன்னிட்டு சென்னை பட்டாபிராமில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பு பஜனைகள் மற்றும் அன்னதானம் வழங்க போலீஸார் அனுமதி வழங்க மறுப்பதாகக்கூறி விவேகானந்தா இந்து இயக்கத்தின் தலைவர் கணபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், அயோத்திக்கு செல்ல முடியாத பக்தர்களுக்காக பட்டாபிராமில் பஜனை மற்றும் அன்னதான நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ள நிலையில் அனுமதி பெறவில்லை எனக்கூறி போலீஸார் நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என தெரிவித்தனர். அதையடுத்து அனுமதி கோரிவிண்ணப்பித்தபோது 7 நாட்களுக்கு முன்பாக விண்ணப்பிக்க வில்லை என்றும், திமுக மற்றும்விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இந்நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் என்றும், மற்ற மதத்தவர்கள் வசிக்கின்றனர் என தேவையற்ற காரணங்களை கூறுகின்றனர்.
மக்களுக்கு இடையூறு இல்லை: இந்த நிகழ்வால் பொதுமக்களுக்கோ அல்லது மற்ற மதத்தவர்களுக்கோ, போக்குவரத்துக்கோ எந்தவொரு இடையூறும் செய்யவில்லை. எனவே தனியார் மண்டபத்தில் நடைபெறும் இந்நிகழ்வுக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு அவசர வழக்காக நேற்று காலை நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரருக்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கட்டுப்பாடுகளுடன் அனுமதி: அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி, இதுதொடர்பாக தனியார் கோயில்கள் மற்றும் திருமண மண்டபங்களில் நேரலை செய்யவோ அல்லது பூஜைகள் மேற்கொள்ளவோ போலீஸாரின் அனுமதி தேவையில்லை. அதேநேரம் அறநிலையத்துறை கோயில்களில் நேரலையோ அல்லது பூஜையோ மேற்கொள்ள கோயில் செயல் அலுவலரிடம் முன்கூட்டியே தகவல் தெரிவித்து அதன்பிறகு மேற்கொள்ளலாம். செயல்அலுவலர் உரிய கட்டுப்பாடுகளுடன் அனுமதியளிக்க வேண்டும்.
ஒருவேளை கூட்டம் அதிகரித்தால் போலீஸார் கூட்டத்தைக் கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளார்.