

சென்னை: நடிகை ஷகிலா மீது வளர்ப்பு மகள் தாக்கியதாக எழுந்த புகாரின் பேரில் போலீஸார் விசாரிக்கின்றனர்.
கோடம்பாக்கம் யுனைடெட் காலனி முதல் குறுக்கு தெருவில் நடிகை ஷகிலா வசித்து வருகிறார். இவர் தனது அண்ணன் மகளான சீத்தல் (19) என்பவரை 6 மாத குழந்தையாக இருந்ததிலிருந்தே, தத்தெடுத்து வளர்த்து வந்தார். ஷகிலாவின் அண்ணன் இறந்த நிலையில், சீத்தலின் தாய் சசி மற்றும் அவரது அக்கா ஜமீலா ஆகியோர் கோடம்பாக்கம் டிரஸ்ட் புரத்தில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ஷகிலா மற்றும் அவரது வளர்ப்பு மகள் சீத்தல் ஆகியோர் இடையே குடும்பப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில், சீத்தல் ஷகிலாவை தாக்கிவிட்டு தனது தாய் சசி வீட்டுக்குச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஷகிலாவின் தோழி, கோடம்பாக்கம் கங்கா நகரைச் சேர்ந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சவுந்தர்யாவிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, நடிகை ஷகிலா வீட்டுக்குச் சென்ற வழக்கறிஞர் சவுந்தர்யா, சீத்தலை தொடர்பு கொண்டு வீட்டுக்கு சமாதானம் பேசவருமாறு அழைத்துள்ளார். இதையடுத்து, சீத்தல் அவரது தாய் சசி மற்றும் அக்கா ஜமீலா ஆகியோர் அங்கு சென்றுள்ளனர்.
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட தகராறில், சீத்தல் அருகிலிருந்து சிறிய பொருளை எடுத்து, சவுந்தர்யாவின் தலையில் தாக்கியதாகவும், சீத்தலின் தாய் சசி, வழக்கறிஞரின் வலது கையில் கடித்ததாகவும் கூறப்படுகிறது.
இதில், காயமடைந்த வழக்கறிஞர் சவுந்தர்யா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு, கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.