உரிமைகளை தொலைத்தவர்களின் உரிமை மீட்பு மாநாடு: தெலங்கானா ஆளுநர் தமிழிசை விமர்சனம்

உரிமைகளை தொலைத்தவர்களின் உரிமை மீட்பு மாநாடு: தெலங்கானா ஆளுநர் தமிழிசை விமர்சனம்
Updated on
1 min read

சென்னை: உரிமைகளை தொலைத்தவர்களே உரிமை மீட்பு மாநாடு நடத்துகிறார்களாம் என திமுக இளைஞரணி மாநாடு குறித்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: இளைஞரணி மாநாடாம், பிரம்மாண்ட முன்னேற்பாடாம், முந்தைய நாளே முக்கியமானவரின் மேற்பார்வையாம், தம்பிகளை காண தனி விமானம் மூலம் சென்ற முக்கியமானவருக்கு முந்தைய நாளே மழைக்கான முன்அறிவிப்பு வந்தும் மக்களைக் காக்க முன்னேற்பாடு செய்ய செல்வதற்கு தனி விமானம் கிடைக்கவில்லையா என்று எங்கோ கேட்கிறது ஒரு குரல்.

இன்று உதயமானவரை முன்னிலைப்படுத்த முந்திச் செல்லும் முக்கியமானவர், இதயத்தோடு தத்தளித்தவர்களை காக்க முந்திச் செல்லவில்லையே ஏன் என்று கேட்கிறது அதே குரல். இது ஆள்பவர்களுக்கு தகுதியா என்று கேட்டால் ஆளுநர்களுக்கு தகுதி இல்லை என்பார்கள்.

ஆனால் ஜனநாயகத்தில் ஆளாளுக்கும் கேள்வி கேட்கும் தகுதி இருக்கிறது என்று உரக்கச் சொல்கிறது அதே குரல். உரிமை மீட்பு மாநாடாம், காவிரி உரிமையை தொலைத்தது யார், கச்சத்தீவை தாரைவார்த்தது யார், ஜல்லிக்கட்டு உரிமையை இழந்தது யார், கல்வி உரிமையை பறிகொடுத்தது யார், நீட் தேர்வு வர ஆரம்பித்தது யார் காலத்தில், உரிமைகளைத் தொலைத்தவர்களே இன்று உரிமை மீட்பு மாநாடு நடத்துகிறார்களாம்.

வாரிசுகளுக்கே அரியணையா, இவர்களிடமிருந்து நம் உரிமையை மீட்டெடுப்பது யார் (தி)க்கு (மு)க்காடும் (க)ண்மணிகள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in