Published : 28 Feb 2018 03:46 PM
Last Updated : 28 Feb 2018 03:46 PM

கார் ஓட்டுநர் திடீர் மரணம்: அமைச்சர் ஓ.எஸ் மணியனுடன் உறவினர்கள் வாக்குவாதம், விரட்டி அடிப்பு

அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் கார் ஓட்டுநர் திடீர் என மரணமடைந்தார். அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்தனர். ஓட்டுநர் வீட்டுக்கு சென்ற அமைச்சருடன் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விரட்டி அடித்தனர்.

தமிழக கைத்தறித்துறை அமைச்சராக இருப்பவர் ஓ.எஸ்.மணியன். இவரது கார் ஓட்டுநராக இருந்தவர் சௌந்தரராஜன் வேணுகோபால்(37). சூளைமேடு சௌராஷ்டிரா நகரில் வசித்து வந்தார். தலைமைச் செயலக கார் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் நீண்டகாலமாக ஓட்டுநராக[ பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் சௌந்தரராஜன் வேணுகோபால் பணிக்கு வந்துள்ளார். காலையிலிருந்தே அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சரிடம் தகவல் தெரிவித்தும் அவர் எதுவும் கண்டுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் வீட்டு வாசலில் நெஞ்சுவலியால் துடித்த ஓட்டுநர் சௌந்தரராஜனை உடனிருந்த போலீஸார் மோட்டார் சைக்கிளில் அமர்த்தி அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது அவர் மயக்கத்தில் கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறி சூளைமேட்டிலுள்ள ஓட்டுநர் இல்லத்தில் அவரது உடலை உடனிருந்தவர்கள் ஒப்படைத்தனர். ஆனால் சௌந்தரராஜன் வேணுகோபாலின் தலையிலிருந்த காயம், உடலிலிருந்த சிராய்ப்புகளைப் பார்த்து அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து விட்டனர்.

உடனடியாக அவரது மரணம் குறித்து சூளைமேடு போலீஸாருக்கும் புகார் அளித்தனர். இந்நிலையில் ஓட்டுநர் மரணமடைந்த தகவல் அறிந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அவரது உடலைப் பார்க்க அவரது இல்லத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது அமைச்சரைப் பார்த்த ஓட்டுநரின் உறவினர்கள் அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு மனிதன் உயிருக்குப் போராடும் போது அவரை உடனடியாக காப்பாற்ற கூட முடியாதா? அவரது தலையில் எப்படி அடிபட்டது, அவரது மரணத்திற்கு அமைச்சர் பதில் கூற வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உடல்நிலை சரியில்லாத ஒருவரை காரிலோ, ஆம்புலன்ஸ் மூலமாகவோ கொண்டுசெல்லாமல் மோட்டார் பைக்கில் எப்படி அனுப்பலாம். இதனால் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதா? அல்லது அமைச்சர் இல்லத்தில் யாராவது அவரை தாக்கினார்களா? என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அமைச்சரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை விரட்டி அடித்துள்ளனர்.

உங்களுக்கு சந்தேகமிருந்தால் என் மீதூ வேண்டுமானாலும் புகார் கொடுங்கள் என்று கூறிவிட்டு அமைச்சர் புறப்பட்டு வந்ததாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர். இதனிடையே சௌந்தரராஜன் மனைவி ரேவதி அளித்த புகாரின் பேரில், சௌந்தரராஜன் உடலை கைப்பற்றிய போலீஸார் சந்தேக மரணத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ஓட்டுநர் மரணமும், அஞ்சலி செலுத்த வந்த அமைச்சர் உறவினர்களால் விரட்டப்பட்ட சம்பவமும் சூளைமேட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x