

சேலம்: திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலத்தை அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் நாளை (ஜன. 21) நடைபெறஉள்ளது. இதில் பங்கேற்பதற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சேலம் வருகிறார். மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திமுக இளைஞரணி மாநிலமாநாட்டில் கலந்து கொள்வதற்காக கட்சியின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் இன்று (ஜன. 20)மாலை சேலம் வருகிறார். சென்னையில் இருந்து கொண்டுவரப்படும் சுடரொளியைப் பெற்று, அதைமாநாட்டுத் திடலில் ஏற்றிவைக்கிறார்.
தொடர்ந்து, முரசொலி புத்தக சாலை கண்காட்சியைத் திறந்து வைக்கிறார். ‘நீட்’ தேர்வு விலக்கு கோரி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள 1,500 பேர் கொண்ட இருசக்கர வாகனப் பேரணி, திமுக தலைவர் ஸ்டாலின் பின்னால் அணிவகுத்து, மாநாட்டுத் திடலுக்குச் செல்கிறது. தொடர்ந்து, 1,000 ட்ரோன்களைக் கொண்டு `ட்ரோன் ஷோ' நடத்தப்படுகிறது.
நாளை திமுக மாநில மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி., மாநாட்டுத் திடலில் உள்ள கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றிவைக்கிறார். மாநாட்டுப் பந்தலை மாணவரணிச் செயலாளர் எழிலரசன் திறந்து வைக்கிறார். காலை 10 மணியளவில் முதல்வர் ஸ்டாலின், மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார்.
பின்னர், தீர்மானங்கள் வாசிப்பு, மொழிப் போர் தியாகிகளின் படத்திறப்பு, திமுக முன்னணித் தலைவர்கள் உரை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மாலையில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். மாநாட்டுப் பந்தலில் 1.25 லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்படுகின்றன. மொத்தம் 5 லட்சம் பேர் பங்கேற்பர். அனைவருக்கும் மதியம் அசைவ உணவு வழங்கப்படுகிறது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் மூலம் மாநாட்டை அடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை இல்லாத அளவுக்குபிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரும்மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடு தொடக்கமாக இந்த மாநாடு அமையும். இவ்வாறு அமைச்சர் நேரு கூறினார்.
திமுக மாவட்டச் செயலாளர்கள் ராஜேந்திரன் எம்எல்ஏ, சிவலிங்கம், செல்வகணபதி உடனிருந்தனர்.