Published : 10 Feb 2018 07:28 AM
Last Updated : 10 Feb 2018 07:28 AM

எம்.பி., எம்எல்ஏக்கள் வழக்கறிஞர் தொழில் செய்யக்கூடாது: பார் கவுன்சில் தேர்தல் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் கருத்து

எம்.பி., எம்எல்ஏ என்பது முழுநேர அரசு பதவி. இப்பதவி வகிப்பவர்கள், வழக்கறிஞர் தொழிலில் இருந்து விலகி இருக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் தொடர்பாக வழக்கறிஞர் எஸ்.பாஸ்கர் மதுரம் தாக்கல் செய்துள்ள மனுக்கள் நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர்.தாரணி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.எம்.ஆனந்தமுருகன், ஏ.கண்ணன், பார் கவுன்சில் சார்பில் எம்.சுபாஷ்பாபு, வருமானவரித் துறை சார்பில் ஸ்ரீமதி வாதிட்டனர்.

விசாரணையின்போது நீதிபதிகள் கூறியதாவது: பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடுவதற்கான நிபந்தனைகளை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்திருப்பவர்கள் மகாத்மா காந்தியையும், தற்போதைய அரசியல்வாதிகளையும் ஒன்றாகக் குறிப்பிட்டுள்ளனர். காந்தி போன்ற தலைவர்கள் தங்கள் சொத்துகளை இழந்து நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவர்கள். தற்போதைய அரசியல்வாதிகள் அப்படி அல்ல.

எம்.பி., எம்எல்ஏ பதவி முழுநேர அரசு பதவி. அப்பதவியில் இருப்பவர்கள் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். தங்கள் கட்சி ஆட்சியில் இருந்தால் அமைச்சராக இருப்பதும், ஆட்சியில் இல்லாவிட்டால் மூத்த வழக்கறிஞர் என்ற பெயரில் நீதிமன்றங்களில் ஆஜராவதையும் அனுமதிக்கக் கூடாது.

பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடுவோர் தேர்தலில் வெற்றி பெற கோடிக்கணக்கில் முதலீடு செய்கின்றனர். வெற்றி பெற்றதும் அதை திரும்ப எடுக்க, பல முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர்.

இதை தடுக்கும் வகையில் தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் வழிகாட்டுதல் குழு வகுத்துள்ள நிபந்தனைகள் சரியானது என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. தலைமை நீதிபதி கூறியுள்ளபடி, இந்த நிபந்தனைகளுக்கு இந்திய பார் கவுன்சில் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

இவ்வாறு கூறிய நீதிபதிகள் தமது உத்தரவில் கூறியதாவது:

பார் கவுன்சில் தேர்தலில் பணப் புழக்கத்தை கண்காணிக்க வருமானவரித் துறையில் தனி குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடுவோர், அவர்களது உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்களை அந்தக் குழு கண்காணிக்க வேண்டும். பணப் புழக்கம் சம்பந்தமாக புகார் அளிக்க வருமானவரித் துறை தனி செல்போன் எண் அறிவிக்க வேண்டும்.

தேர்தலில் போட்டியிடுவோரின் குற்றப் பின்னணி, வழக்கறிஞர் பணி அனுபவம், சொத்து விவரங்களை பார் கவுன்சில் இணையதளத்தில் உடனுக்குடன் வெளி யிட வேண்டும். இறுதி வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் முன்பு, வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் விவரங்களை டிஜிபிக்கு அனுப்பி அவர்களின் முன்நடத்தை குறித்து சான்றிதழ் பெற வேண்டும்.

தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலின் நிபந்தனைகளுக்கு ஒப்புதல் வழங்க மறுத்த உத்தரவை மறு பரிசீலனை செய்வது தொடர்பாக இந்திய பார் கவுன்சில் வரும் 12-ம் தேதி நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x