

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகேயுள்ள வடமலாப்பூரில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டைப் பார்வையிட வந்தஇலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான், செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழர்களின் பாரம்பரிய அடையாளமான ஜல்லிக்கட்டை சிறப்பாக நடத்திவரும் தமிழக அரசுக்குப் பாராட்டுகள். இலங்கையில் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் அண்மையில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதேபோல, தமிழர்கள் வசிக்கும்பிற நாடுகளிலும் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும்.
ஆழ்கடல் மீன்பிடிப்பில் எல்லை என்பதை நிர்ணயம் செய்ய முடியாது. தமிழக மீனவர்களும் கைதுசெய்யப்படுகிறார்கள். இலங்கை மீனவர்களும் இங்கே கைது செய்யப்படுகிறார்கள். மனிதாபிமான அடிப்படையில் அவ்வப்போது மீனவர்கள் விடுதலையும் செய்யப்படுகிறார்கள்.
எனவே, மீனவர்கள் பிரச்சினையில் சுமுகத் தீர்வு காண்பதற்கு, தமிழக மற்றும் இலங்கை மீன்வளத் துறை அமைச்சர்கள் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.