Published : 18 Jan 2024 05:52 AM
Last Updated : 18 Jan 2024 05:52 AM

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 2-ம் இடம்: பரிசை வாங்க வீரர் மறுப்பு

அபிசித்தர் | கோப்புபடம்

மதுரை: அலங்காநல்லூரில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி முடிவில் மதுரை மாவட்டம் கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்தி, 18 காளைகளை அடக்கி முதல் பரிசை வென்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும், 17 காளைகளை அடக்கி, இரண்டாம் பரிசுக்கு சிவகங்கை மாவட்டம் பூவந்தியைச் சேர்ந்த அபிசித்தர் அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், போட்டியில் பாரபட்சம் இருப்பதாகக் கூறி இரண்டாம் பரிசுக்கு அறிவிக்கப்பட்ட அபிசித்தர், தனக்கான மோட்டார் சைக்கிள் பரிசை வாங்க மறுத்து வெளியேறினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: கடந்த 2023-ல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 30 மாடுகள் பிடித்தேன். 26 மாடுகள் பிடித்ததாகக் கூறி முதல் பரிசு வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் அரசியல் செய்து எனக்கு முதல் பரிசை கிடைக்க விடாமல் இந்த அரசு செய்து விட்டது. இதற்கு காரணம் அமைச்சர்தான். இம்முறை முதல் பரிசு பெற்ற கார்த்தி, கடந்த ஆண்டும், இவ்வாண்டும் பரிந்துரையின் பேரில் வந்து மாடு பிடித்தார்.

நான் 2 சுற்றில் (பேட்ஜ்) 11 மாடுகள் அடக்கினேன். அவர் 3 சுற்றில்தான் 11 மாடுகளைப் பிடித்தார். நானும், கார்த்தியும் 17 மாடுகள் பிடித்தோம். இதை விழாக் குழுவினரும் கண்டறியவில்லை.நான் நீதிமன்றத்துக்குச் செல்வேன்.வீடியோவைப் பார்த்து, இதே மேடையில் என்னை முதல் பரிசு பெற்றதாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் விளக்கம்: இதுகுறித்து அமைச்சர் பி. மூர்த்தி கூறும்போது, ‘‘ஜல்லிக்கட்டு என்பது பொதுவானது. எவ்விதப் பாகுபாடும் இன்றியே போட்டி நடத்தப்பட்டது. கடைசி சுற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்துபோட்டியாளர்கள் அனைவருக்குமே வாய்ப்பளித்தோம்.

விழாக் குழுவினரும்,மாவட்ட நிர்வாகமும் இணைந்து தகுதியின் அடிப்படையில்தான் பரிசுவழங்கப்பட்டது. அதிகாரிகளும்முறையாகச் செயல்பட்டு முடிவை அறிவித்துள்ளனர். குளறுபடி நடக்க வாய்ப்பே இல்லை. 2-வது பரிசு பெற்றவரின் குற்றச்சாட்டு ஏற்க இயலாதது’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x