Published : 02 Aug 2014 12:03 PM
Last Updated : 02 Aug 2014 12:03 PM
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பாதிக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் கே.இன்பராஜ் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா நடுநிலைப் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்தோர் மற்றும் தீக்காயமடைந்தோர் குடும் பங்களுக்கு போதிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று கோரி கடந்த 2012-ம் ஆண்டு உயர் நீதின்றத்தில் நான் ஒரு வழக்கு தொடர்ந்தேன்.
அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இழப்பீட்டுத் தொகையை நிர்ணயம் செய்வதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பி.சண்முகம் தலைமையில் ஒரு நபர் விசா ரணை ஆணையம் அமைக்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உயர் நீதி மன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
எனினும் நீதிமன்ற உத்தரவை இதுவரை மாநில அரசு நிறைவேற்றவில்லை. ஆகவே, நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தத் தவறியதற்காக தமிழக அரசின் தலை மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றத துக்கான நடவடிக்கையை நீதி மன்றம் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் என்.பால் வசந்தகுமார், கே.ரவிச்சந்திர பாபு ஆகியோரைக் கொண்ட அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த மனு தொடர்பாக தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 1-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாகவும், அன்றைய தினம் தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT