“அதிமுக ஆட்சியில் அகவிலைப்படி உள்ளிட்டவை முறையாக வழங்கப்பட்டது” - ஓபிஎஸ்

“அதிமுக ஆட்சியில் அகவிலைப்படி உள்ளிட்டவை முறையாக வழங்கப்பட்டது” - ஓபிஎஸ்
Updated on
1 min read

அரியலூர்: “அதிமுக ஆட்சியில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் முறையாக வழங்கப்பட்டது” என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

அரியலூரில், அரியலூர் - பெரம்பலூர் மாவட்ட அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர்கள் அரியலூர் அன்பு. விஜயபார்த்திபன், பெரம்பலூர் ஆர்.டி.ராமச்சந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று பேசினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: "போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும். அவர்களுக்கு வழங்க வேண்டிய போனஸ் மற்றும் சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டது. மத்திய அரசு தொழிலாளர்களுக்கான அகவிலைப்படியை வழங்கிய உடனே, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அதனை தொழிலாளர்களுக்கு வழங்கினார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். மூன்றாவது முறையாக மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதாலேயே அவர்களுக்கு எங்களது ஆதரவை அளித்துள்ளோம். திமுக மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அதனுடைய விளைவு வரும் மக்களவைத் தேர்தலில் தெரிய வரும்" என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in