

கோவை: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் 22-ம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி, கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில், அயோத்தியில் இருந்து கொண்டு வரப்பட்ட அட்சதையை வீடு வீடாக விநியோகிக்கும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது.
ராமநாதபுரம் அம்மன் குளத்தில் அட்சதை விநியோகிக்கும் பணியை இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது, ‘‘தமிழகம் முழுவதும் ஒரு கோடி வீடுகளுக்கு இந்த அட்சதையை வழங்க ஆர்எஸ்எஸ் அமைப்பு முடிவு செய்துள்ளது. கோவையில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு இதை வழங்க உள்ளோம். ராமர் கோயில் கும்பாபிஷேக நாளன்று ஒவ்வொரு வீடுகளிலும் கோலமிட வேண்டும். அனைவரும் ஒன்று சேர்ந்து ஸ்ரீராம ஜெயத்தை பாராயணம் செய்ய வேண்டும்’’ என்றார்.
நிகழ்வில், இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் எஸ்.சதீஷ், மாவட்ட செய்தி தொடர்பாளர் சி.தனபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நேற்று வரை ரத்தினபுரி, கணபதி, கவுண்டம்பாளையம், குனியமுத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒரு லட்சம் வீடுகளுக்கு அட்சதை வழங்கப்பட்டுள்ளதாக இந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.