மரக்காணம் பகுதியில் 133 மி.மீ பொழிவு - பலத்த மழையால் போக்குவரத்து துண்டிப்பு

மரக்காணம் அருகே கந்தாடு ஏரி உடைந்து தண்ணீர் வெளியேறுகிறது.
மரக்காணம் அருகே கந்தாடு ஏரி உடைந்து தண்ணீர் வெளியேறுகிறது.
Updated on
1 min read

விழுப்புரம்: தொடர் மழையால் மரக்காணம் செல்லியம்மன் கோயில் தெரு,அம்பேத்கர் நகர், மண்டவாய், புதுகுப்பம், கந்தாடு, புதுப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.

கந்தாடு ஏரியின் நீர்ப்பாசனத்தை நம்பி இப்பகுதியில் சுமார் 200 ஏக்கர் விலை நிலங்கள் உள்ளன. கடந்த வாரம் பெய்த பருவ மழையால் இந்த ஏரி முழு கொள்ளளவை எட்டியது. இந்நிலையில் மரக்காணம் பகுதியில் பெய்த கனமழையினால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக ஏரியின் மையப் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு,கட்டுக் கடங்காமல் நீர் வெளியேறியது. இதனால் பழைய தெரு,புதுத் தெரு, கந்தம்பாளையம் ஈஸ்வரன் கோயில் தெரு, காணிமேடு உள்ளிட்ட பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மேலும் அப்பகுதியில் சுமார் 200 ஏக்கர் விவசாய நிலங்களை வெள்ளம் சூழந்தது. மரக்காணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ராய நல்லூர், அசப்போர், வண்டிப் பாளையம், புதுப்பாக்கம், திருக்கனூர் பிலாரி மேடு, பச்சை பயித்தன் கொல்லை, அனுமந்தை, ஆலப்பாக்கம், கீழ் பேட்டை, கூனிமேடு, நடுக்குப்பம் உள்ளிட்ட ஊராட்சிகளிலும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. குடியிருப்பு பகுதிகள் சாலைகளில் தேங்கி நிற்கும் மழை நீரை உடனடியாக வெளியேற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

கடும் வெள்ளப் பெருக்கால் காணிமேடு மற்றும் மண்டகப் பட்டு கிராமங்களுக்கு இடையேயான பத்து கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப் பட்டது. இதனால் பொது மக்கள் சுமார் 10 கி.மீ தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை சாலை யோரம் அமைந்துள்ள பூமி ஈஸ்வரர் கோயில் வளாகத்தில் மழை நீர் குளம் போல் தேங்கியது. மரக்காணம் பகுதியில் மழை பாதிப்பை அமைச்சர் கே.எஸ். மஸ்தான், ஆட்சியர் பழனி, திண்டிவனம் எம்எல்ஏ அர்ஜூணன், திண்டிவனம் சார் - ஆட்சியர் திவ் யான்ஷி நிகம் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். தாழ்வான பகுதிகளில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in