சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்று பெரும்பாலான இடங்களிலும், வரும் 9, 10-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், வரும் 11, 12, 13-ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், வரும் 10-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மிதமான அல்லது கனமழை பெய்யக்கூடும்.

ஜன. 7-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 11 செ.மீ. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு ஆகிய இடங்களில் 7 செ.மீ. விருதுநகர் மாவட்டம் பிளவக்கல் பெரியாறு அணையில் 6 செ.மீ. காரைக்கால், கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகர், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி, நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

வரும் 9, 10-ம் தேதிகளில் தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in