Published : 07 Jan 2024 05:47 AM
Last Updated : 07 Jan 2024 05:47 AM

ஸ்டெர்லைட் வழக்கில் மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாட வேண்டும்: தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று விடுத்த அறிக்கை:

சுற்றுச்சூழலை நாசப்படுத்தியும், தூத்துக்குடி மக்களின் உடல்ஆரோக்கியத்தையும் கெடுத்ததோடு வேளாண் நிலங்களையும் பாழ்படுத்திய ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூட வேண்டும் என்று 1996-ம் ஆண்டில் இருந்து மதிமுக போராடி வருகிறது.

இந்நிலையில், ஆலையை மேலும் இரண்டு மடங்கு விரிவாக்கம் செய்ய நிர்வாகம் முனைந்ததை எதிர்த்து குமரெட்டியாபுரம், தெற்கு வீரபாண்டியபுரம், சில்வர்புரம், மற்றும் தூத்துக்குடி மாநகரமக்கள் கொந்தளித்துப் போராடினர். போராட்டத்தின் நூறாவது நாளான 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி ஆயிரக்கணக்கான மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி சென்றனர்.

அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு காவல்துறையை ஏவி, அவர்கள் மீது துப்பாக்கி சூடுநடத்தியது. இதில் 13 பேர் இறந்தனர். அதன் பிறகு ஏற்பட்ட மக்கள்கொந்தளிப்பால், அதிமுக அரசுஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக 2018-ம் ஆண்டு மே 28-ம் தேதி ஆணைப் பிறப்பித்தது.

அதன் பின்னரும் நீதிமன்றங்களில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என வாதங்களை எடுத்து வைத்து வருகிறேன்.

இந்நிலையில், ஆலையை திறக்க கோரி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு ஜன.22-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இவ்வழக்கில் மதிமுக சார்பில் வழக்கறிஞர் ஆனந்த செல்வம் வாதாட இருக்கிறார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்து ஆலையை மீண்டும் திறக்க முடியாதபடி தக்க முறையில் வழக்கை கண்ணும் கருத்துமாக கண்காணிக்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x