சென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் ”வாட்ஸ்அப்”க்கு டிஜிட்டல் டிக்கெட்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சென்னை: மெட்ரோ ரயில் நிலையங்களில் காகிதப் பயன்பாட்டை குறைக்கும் வகையில், பயணிகளின் ‘வாட்ஸ்அப்’ செயலி வாயிலாக டிஜிட்டல் டிக்கெட் வழங்கும் முறையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கி உள்ளது.

சென்னையில் 2 வழித்தடங்களில் தற்போது 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் தினமும் 2.60 லட்சம் முதல் 3 லட்சம் பேர் வரை பயணம் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டில் இதுவரையில் இல்லாத அளவுக்கு 9 கோடிக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். தற்போதுள்ள 41 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் காகித டிக்கெட், பயண அட்டை மற்றும் ‘க்யூ ஆர் கோடு’ முறையில் டிக்கெட் பெறும் வசதி உள்ளது.

இருப்பினும், 20 சதவீதத்துக்கும் மேற்பட்ட பயணிகள் காகித டிக்கெட்டை எடுத்து பயணம் செய்து வருகின்றனர். எனவே, காகிதப் பயன்பாட்டை குறைக்கும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, காகித டிக்கெட்களுக்குப் பதிலாக, பயணிகளின் ‘வாட்ஸ்அப்’ செயலி வாயிலாக டிஜிட்டல் டிக்கெட் வழங்கும் முறையை தொடங்கி உள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: 60 சதவீத பயணிகள் அட்டை வாயிலாகவும், 20 சதவீதம் பேர் ‘க்யூஆர்’ கோடு வாயிலாக டிக்கெட் எடுத்து பயணம் செய்து வருகின்றனர். 20 சதவீத பயணிகள் காகித பயணச்சீட்டு எடுத்து பயணிக்கின்றனர். எனவே, காகிதப் பயன்பாட்டை குறைக்கும் வகையில், பயணிகளின் வாட்ஸ்அப் செயலி வாயிலாக டிஜிட்டல் டிக்கெட் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது, விமான நிலையம், கோயம்பேடு, கிண்டி உள்ளிட்ட சில ரயில் நிலையங்களில் இந்த புதிய முறை தொடங்கப்பட்டுள்ளது.

டிக்கெட் கவுன்ட்டர்களில் காகித டிக்கெட்டுக்குப் பதிலாக, பயணிகளின் வாட்ஸ்அப் எண்ணை வாங்கி, அதற்கு ‘க்யூ ஆர் கோடு’ அனுப்பி விடுவோம். அவர்கள் ரயில் நிலையத்தின் நுழைவு வாயிலில் ‘க்யூஆர் கோடை’ ஸ்கேன் செய்து உள்ளே சென்று பிறகு வெளியேறலாம். விரைவில், அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த வசதி கொண்டு வர உள்ளோம். வாட்ஸ்அப் வசதி இல்லாதவர்களுக்கு மட்டும் காகித டிக்கெட் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in