வேலூர் அருகே 12 பேர் இறப்புக்கு காரணமான ரயில் விபத்து: ஓட்டுநருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை ரத்து

வேலூர் அருகே 12 பேர் இறப்புக்கு காரணமான ரயில் விபத்து: ஓட்டுநருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை ரத்து

Published on

சென்னை: வேலூர் அருகே கடந்த 2011-ல் நடந்த ரயில் விபத்துக்கு காரணமான ரயில் ஓட்டுநருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு செப்டம் பரில் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்த ரயில், மேல்பாக்கம் ரயில் நிலையம் அருகில் அரக்கோணத்தில் இருந்து காட்பாடி நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலின் பின் புறத்தில் மோதி விபத்துக் குள்ளானது.

செல்போனில் பேசியபடி...: இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 71 பேர் படுகாயமடைந்தனர். விதிகளை மீறி நண்பருடன் செல்போனில் பேசிக் கொண்டே அதிவேகத்தில், சிக்னல்களை மதிக்காமல் ரயிலை இயக்கி விபத்து ஏற்படுத்தியதாக சென்னை கடற்கரை ரயில் நிலையத் தில் இருந்து சென்ற ரயிலின் ஓட்டுநர் ராஜ்குமாருக்கு எதிராக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றம், ரயில் ஓட்டுநர் ராஜ்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த 2017-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி சுந்தர் மோகன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ரயிலை இயக்கிய போது ராஜ் குமார் தனது நண்பருடன் செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார் என்பதையும், அஜாக்கிரதையாக சிக்னல்களை மதிக்காமல் சென்றார் என்பதையும் அரசு தரப்பு தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கத் தவறிவிட்டது. எனவே அவருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த 10 ஆண்டுகள் சிறை தண்டனை ரத்து செய்யப்படுகிறது எனக் கூறி தீர்ப்பளித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in