‘மக்களுடன் முதல்வர்’ திட்ட முகாமில் சுயதொழில் கடனுக்கு பதியலாம்

‘மக்களுடன் முதல்வர்’ திட்ட முகாமில் சுயதொழில் கடனுக்கு பதியலாம்
Updated on
1 min read

சென்னை: சுயதொழில் தொடங்க விரும்புவோர் வங்கிக் கடன் பெற, சென்னையில் ஜன.27-ம் தேதி வரை நடைபெறும் ‘மக்களுடன் முதல்வர்’ திட்ட முகாம்களில் பதிவு செய்யலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மாவட்டத்தில் சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், மண்டல இணை இயக்குநர் அலுவலகம் மூலம் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்குதல் திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆர்வமுள்ள தகுதிவாய்ந்த இளையோரும், பொதுமக்களும், புகைப்படம், மாற்றுச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, விலைப்பட்டியல் மற்றும் திட்ட அறிக்கை ஆகியஆவணங்களுடன் வந்து, மண்டலஇணை இயக்குநர் அலுவலர்கள் மூலமாகஇணைய தளத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

கடன் திட்ட விண்ணப்பம் உடனடியாக வங்கிக்கு பரிந்துரை செய்யப்பட்டு கடன் பெற்று தொழில் நிறுவனம் தொடங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் ஜன.27-ம் தேதி வரை நடைபெறும் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டமுகாம்களில் பங்கேற்று, தொழில்முனைவோர் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in