

திருப்புவனம்: லாடனேந்தலில் உள்ள பூங்காவனம் முத்துமாரியம்மன் கோயில் மண்டல பூஜையில் பெண் சாமியார் 7 அடி உயர முள் படுக்கையில் படுத்து அருள்வாக்கு கூறினார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே லாடனேந்தலில் உள்ள பூங்காவனம் முத்துமாரி யம்மன் கோயில் மண்டல பூஜை கார்த்திகை 1-ம் தேதி தொடங்கியது. இதையொட்டி தினமும் பூங்காவனம் முத்து மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. கோயில் நிர்வாகியும் சாமியாருமான நாகராணி காப்புக் கட்டி விரதம் இருந்தார்.
நேற்று 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. நேற்று காலை மண்டல பூஜையையொட்டி முத்து மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தன. தொடர்ந்து கோயில் எதிரே குவித்து வைக்கப்பட்டிருந்த 7 அடி உயர கருவேலம், இலந்தை, கற்றாலை உள்ளிட்ட பல வகை தாவரங்களின் முள் படுக்கையில் சாமியார் நாகராணி படுத்து தவமிருந்தார்.
மேலும் அவர் பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். தொடர்ந்து அன்னதானம் நடந்தது. அருள் வாக்கு கேட்க மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.