

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டத்தில் பெரு மழை வெள்ளத்தால் அதிகம் பாதிப்படைந்த 4 வட்டங்கள் மற்றும் 11 வருவாய் கிராமங்களில் உள்ளவர்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஓரளவு பாதிப்படைந்த பிற அனைத்து பகுதிகளுக்கும் ரூ.1,000 நிவாரண நிதி வழங்கப்படுகிறது. நேற்று பிற்பகல் 2 மணி வரை 92 சதவீதத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
நிவாரணத் தொகையை பெறுவதற்கு டோக்கன் வாங்காத காரணத்தாலோ, டோக்கன் பெற்றும் உரிய நேரத்தில் வர இயலாத காரணத்தாலோ, டோக்கனை தவறவிட்டதனாலோ நிவாரண நிதியை இதுவரை பெறாதவர்கள் கடைசி வாய்ப்பாக இன்று நேரடியாக அந்தந்த நியாய விலைக் கடைகளுக்கு வருகை தந்து கைரேகை வைத்து நிதியுதவி பெற்றுக்கொள்ளலாம். நிவாரணத் தொகை இன்று மாலை 5 மணி வரை மட்டுமே வழங்கப்படும்.
நாளை ( 4-ம் தேதி ) முதல் பொது விநியோகத் திட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் பணி நியாய விலைக் கடைகளில் தொடங்கப் படவுள்ளது. பொங்கல் பண்டிகை வர இருக்கும் காரணத்தால் அதற்கு முன்பாக பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்க வேண்டியதுள்ளது. எனவே, மேற்கொண்டு கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பில்லை என்பதால், இதுவரை நிவாரண நிதி பெறாமல் தவறவிட்டவர்கள் கடைசி நாளான இன்று தவறாமல் நிவாரண தொகை யினை பெற்று பயனடையலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.