Published : 23 Jan 2018 10:09 AM
Last Updated : 23 Jan 2018 10:09 AM
நடப்பாண்டு நடைபெற உள்ள நீட் தேர்வில் நாடு முழுவதும் ஒரே மாதிரி வினாத்தாள் இருக்கும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதி அளித்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை நேற்று காலை தொடர்புகொண்டு பேசினேன். அப்போது ஒரே மாதிரியான வினாத்தாள், மாநிலப் பாடத்திட்டத்திலிருந்தும் கேள்விகள் போன்ற கோரிக்கைகளை தமிழக மாணவர்களின் சார்பாக பகிர்ந்து கொண்டேன். அப்போது பிரகாஷ் ஜவடேகர், “இந்த ஆண்டு இந்தியா முழுமைக்கும் அனைத்து மாநில மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான கேள்வித்தாள் வழங்கப்படும். இத்துடன் சிபிஎஸ்இ பாடத்திட்டம் மற்றும் அனைத்து மாநிலங்களின் பாடத்திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, அதிலிருந்து மட்டுமே கேள்விகள் தயாரிக்கப்படும்.
தமிழக மாணவர்களுக்கு மாநில பாடத்திட்டமும், கேள்வியும் சேர்க்கப்படும் என உறுதியை தெரிவியுங்கள். கடந்த ஆண்டு என்னனென்ன குறைபாடுகள் இருந்ததோ அவற்றையெல்லாம் நீக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. அதனால் தமிழக மாணவர்கள் நம்பிக்கையோடு இந்த தேர்வை எதிர்கொள்ளலாம்” என்று அமைச்சர் உறுதி அளித்தார். எனவே, தமிழக மாணவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றுவதில் தமிழக பாஜக என்றென்றும் துணை நிற்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT