Published : 16 Jan 2018 09:17 AM
Last Updated : 16 Jan 2018 09:17 AM
தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, 750 கிலோ காய், கனிகள் மற்றும் இனிப்புகளால் நந்தியம் பெருமானுக்கு நேற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
தஞ்சாவூர் பெரியகோயில் எனப்படும் பெருவுடையார் கோயிலில் மிகப்பெரிய நந்தி சிலை உள்ளது. இந்த நந்திக்கு பொங்கல் பண்டிகையான நேற்றுமுன்தினம் மாலை, பால், தயிர் மற்றும் மஞ்சள் போன்ற பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து, மாட்டுப் பொங்கலான நேற்று மூலவர் பெருவுடையாருக்கு (லிங்கம்) சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து உருளைக் கிழங்கு, கத்தரிக்காய், முட்டைகோஸ், பூசணிக்காய், வாழைக்காய், பாகற்காய், கேரட், நெல்லிக்காய் போன்ற பல்வேறு வகையான காய்கறிகள், ஆரஞ்சு, வாழைப்பழம், ஆப்பிள், மாதுளை, கொய்யா போன்ற பல வகையான பழங்கள் மற்றும் முறுக்கு, அதிரசம், லட்டு உள்ளிட்ட பல்வேறு வகையான இனிப்புகள், மலர்கள் என 750 கிலோ பொருட்களைக் கொண்டு நந்தியம்பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
108 பசுக்களுக்கு அலங்காரம்
மேலும், நந்தி சிலை முன்பு 108 பசுக்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு, பசுக்கள் மீது சந்தனம், குங்குமம் பூசப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு, பட்டுத்துணி போர்த்தப்பட்டு வழிபாடு நடைபெற்றது. பின்னர் நந்திக்கு படைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், இனிப்புகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT