Published : 27 Aug 2014 12:06 PM
Last Updated : 27 Aug 2014 12:06 PM

இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் படிக்க உடுமலை அரசு கல்லூரி மாணவிகள் தேர்வு: ஆராய்ச்சி மேற்கொள்ள பேராசிரியர் தேர்வு

தமிழக அரசு திட்டத்தின்கீழ், உடுமலைப்பேட்டை அரசு கலைக் கல்லூரி மாணவிகள் இருவரும், பேராசிரியர் ஒருவரும் இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் படிக்க, ஆராய்ச்சி மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்திலுள்ள அரசு கலைக் கல்லூரி மாணவர்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் ஒரு பருவம் தங்கிப் படிக்கும் வகையிலான திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ், தேர்வு செய்யப்படும் மாணவர்கள், பேராசிரியர்களின் செலவுகள் அனைத்தையும் அரசே ஏற்கும்.

உடுமலைப்பேட்டை அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை கணிதம் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவிகள் எல்.ரேவதி லண்டனில் உள்ள லெய்ஸ்டர் பல்கலைக் கழகத்திலும், பி.பொன்மலர் லீட்ஸ் பல்கலைக்கழகத்திலும் படிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஷ்பீல்ட் ஹாலம் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கும், கற்பிப்பதற்கும் உடுமலை அரசு கலைக் கல்லூரி ஆங்கிலத் துறைத் தலைவரும், பேராசிரியருமான அ.வாசுதேவன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் இதே கல்லூரியில் இருந்து மூன்று மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தங்கள் படிப்பை வெற்றிகரமாக முடித்து திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர்களுக்கு கல்லூரி முதல்வர் ஆ.கிறிஸ்டினாள் மேரி சுகுணவதி, கல்லூரி ஆட்சிக் குழுவினர், அனைத்து துறை பேராசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர் சங்கத்தினர் வாழ்த்து தெரிவித்தனர். இந்தத் தகவலை கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x