Published : 10 Jan 2018 06:23 PM
Last Updated : 10 Jan 2018 06:23 PM

விஜய் சேதுபதி, கோபி நயினார் உள்ளிட்ட 11 பேருக்கு பெரியார் விருதுகள்: பெரியார் முத்தமிழ் மன்றம் அறிவிப்பு

 

விஜய் சேதுபதி, கோபி நயினார், ஆர்.பார்த்திபன், செழியன், சல்மா உள்ளிட்ட 11 பேருக்கு தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் வழங்கும் பெரியார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் 1995-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 24 ஆண்டுகளாக இயல், இசை, நாடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

தை முதல்நாளாம் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளையொட்டி இந்த ஆண்டும் பல்துறைகளில் சிறந்து விளங்குகின்ற தமிழர்களுக்கு பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 15, 16 ஆகிய இரண்டு நாட்கள் சென்னை பெரியார் திடலில் நடைபெறும் திராவிடர் திருநாள் விழாவில் இவ்விருதுகள் வழங்கப்படவுள்ளன.

நடிகர் விஜய் சேதுபதி, கவிஞர் செவ்வியன், திரைப்பட இயக்குநர் கோபி நயினார், பறையிசைக் கலைஞர் வேலு ஆசான், ஓவியர் ஹாசிப்கான் ஆகியோருக்கு 15.01.2018 விழாவிலும், இயக்குநர் நடிகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் (2017-ஆம் ஆண்டுக்குரியது), மராத்தான் வீரர் சைதை மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ, இன்னிசை ஏந்தல் திருபுவனம் ஆத்மநாதன், இயக்குநர் ஒளிப்பதிவாளர் செழியன், கவிஞர் சல்மா, ஓவியர் அபராஜிதன் ஆகியோர்க்கு 16-01-2018 விழாவிலும் பெரியார் விருது வழங்கப்படவுள்ளது.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மேற்கண்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று விருது வழங்க உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x