தூத்துக்குடி மாவட்ட நிவாரண பணிக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

தூத்துக்குடி மாவட்ட நிவாரண பணிக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்
Updated on
1 min read

தூத்துக்குடி: தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலர், வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில், நிவாரண பணிகளை மேற்கொள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சி, மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதிகளுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் டி.கார்த்திகேயன், ஏரல், ஆவரங்காடு, இடையர்காடு, சிறுதொண்டாநல்லூர், ஆறுமுகமங்கலம், மாங்கோட்டகுப்பம், சம்படி மற்றும் சம்படி காலனி பகுதிகளுக்கு சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலர் தரேஸ் அகமது, மேல மங்கலகுறிச்சி, கீழமங்கலகுறிச்சி, அகரம், மஞ்சள்நீர்காயல், பழையகாயல், முக்காணி, கொற்கை, உமரிக்காடு பகுதிகளுக்கு சென்னை பெருநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் அல்பி ஜான் வர்க்கீஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி மற்றும் கருங்குளம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குநர் பொன்னையா, ஆழ்வார்திருநகரி பேரூராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு பதிவுத்துறை தலைவர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ், வரதராஜபுரம், சிவராமமங்கலம், அப்பன்திருப்பதி, குலசேகரநத்தம், சாமிஊத்து, ஆழ்வார்தோப்பு, கோவங்காடு தெற்கு, கோட்டைக்காடு பகுதிகளுக்கு பேரூராட்சிகள் இயக்குநர் கிரண் குராலா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் வட்டங்களுக்கு நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு, வாழவல்லான், ஆழ்வார்திருநகரி, அழகியமணவாளபுரம், செம்பூர், புன்னக்காயல், மேலஆத்தூர், திருப்புளியங்குடி, சின்னநட்டாத்தி, சூழவாய்க்கால் பகுதிகளுக்கு வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையர் கோ.பிரகாஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அந்தந்த பகுதிகளில் மீட்பு, நிவாரண பணிகளில் ஈடுபடுவர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in