Published : 22 Dec 2023 06:18 AM
Last Updated : 22 Dec 2023 06:18 AM

பொன்முடியின் பதவி இழப்பால் திருக்கோவிலூர் தொகுதி காலியாகிறது

சென்னை: உயர் நீதிமன்ற தீர்ப்பால் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவிகளை இழந்துள்ள க.பொன்முடியை தேர்வு செய்த திருக்கோவிலூர் தொகுதி காலியாகிறது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, எம்.பி., எம்எல்ஏ.க்கள் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டாலே அவர்கள் தகுதி இழப்பு செய்யப்படுவார்கள். அந்த வகையில், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சொத்து குவிப்புவழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், அவருக்கு3 ஆண்டுகள் சிறை, ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அமைச்சர், எம்எல்ஏ பதவிகளை பொன்முடி இழந்துள்ளார்.

அரசிதழில் வெளியாகும்: இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல், சட்டப்பேரவை செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த தீர்ப்பை பரிசீலித்து, அமைச்சர் பதவி இழப்பு மற்றும் எம்எல்ஏ பதவி தகுதியிழப்பு குறித்து அரசிதழில் சட்டப்பேரவை செயலகம் அதிகாரப்பூர்வமாக வெளியிடும்.

பொன்முடியின் எம்எல்ஏ பதவி தகுதி இழப்பு அறிவிக்கப்பட்டதும், அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற திருக்கோவிலூர் தொகுதி காலியாகியுள்ளதாக அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை செயலகம் பரிந்துரைக்கும். இந்த பரிந்துரையை ஏற்று தேர்தல் ஆணையம் இதற்கான அறிவிப்பை வெளியிடும். இதையடுத்து, 6 மாதங்களுக்குள் அந்த தொகுதிக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

9 ஆண்டுகளுக்கு போட்டியிட முடியாது: அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தலுடன் திருக்கோவிலூர் சட்டப் பேரவைதொகுதிக்கான தேர்தலும் நடத்தப்பட வாய்ப்புள்ளது. இதற்கிடையே, 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், பொன்முடி அடுத்த 9 ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

தகுதியிழக்கும் 3-வது அமைச்சர்: தமிழக அரசியல் வரலாற்றில்குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதால் எம்எல்ஏபதவியில் இருந்து தகுதியிழக்கும் 3-வதுஅமைச்சர் பொன்முடியாவார். முன்னதாக,தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாகடந்த 2014-ம் ஆண்டு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறைக்குச் சென்றார். அப்போது அவர் எம்எல்ஏ பதவி தகுதியிழப்புக்கு உள்ளானதால் முதல்வர் பதவியை இழந்தார்.

இதையடுத்து, அதிமுக ஆட்சியில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால் தகுதியிழப்புக்கு உள்ளானார். தற்போது, சொத்து குவிப்பு வழக்கில் திமுக அமைச்சர் பொன்முடி தகுதியிழப்பை சந்தித்துள்ளார்.

இரு வழக்குகள்: கடந்த 1996-2001-ம் ஆண்டுகளில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பொன்முடி இருந்தபோது தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கு, 2006-11-ல் உயர்கல்வி அமைச்சராக இருந்தபோது தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கு என 2 வழக்குகள் அவர் மீது இருந்தன. இதில் 2006-11-ல் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கியுள்ளார். மற்றொரு வழக்கில் அவர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தார். இந்த வழக்கு தற்போது நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பொன்முடி மீது நிலுைவயில் உள்ள மற்ற வழக்குகள: கடந்த 2006-11 காலகட்டத்தில் உயர் கல்வித்துறை அமைச்சராக பதவிவகித்தபோது பொன்முடியும், அவரது மனைவியும் வருமானத்துக்கு அதிகமாகசொத்து குவிப்பில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் தற்போது சென்னைஉயர் நீதிமன்றம் இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இதேபோல கடந்த 1996-2001 திமுக ஆட்சி காலத்தில் பொன்முடி போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்தபோது ரூ.1.36 கோடி அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் வேலூர் முதன்மை நீதிமன்றம் இருவரையும் விடுதலை செய்தது. அந்த வழக்கை தாமாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இதேபோல கடந்த 2006-2011 காலகட்டத்தில் உயர்கல்வித்துறை மற்றும் கனிமவளங்கள் துறை அமைச்சராக பொன்முடி வகித்தபோது, அவரது மகனும் தற்போதைய திமுக எம்பியுமான கவுதம சிகாமணிக்கு, விழுப்புரம் மாவட்டம் வானுார் அருகே பூத்துறை கிராமத்தில் செம்மண் எடுக்க, 2007ல் தமிழக அரசுஅனுமதி அளித்தது. அதன்பிறகு கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் பொன்முடி, அவரது மகன், உறவினர் உள்ளிட்ட 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு கீழமை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தவழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோருக்கு எதிராக சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கலக்கத்தில் திமுக அமைச்சர்கள்....! அமைச்சர் பொன்முடி போலவே தற்போதைய திமுக அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன் அவரது மனைவி ஆதிலட்சுமி, தங்கம் தென்னரசு அவரது மனைவி மணிமேகலை, ஐ.பெரியசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி ஆகியோரை விடுதலை செய்து கீழமை நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஏற்கெனவே சொத்து குவிப்பு வழக்கு மற்றும் பிற வழக்குகளி்ல் சிறை தண்டனை பெற்றதால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, முன்னாள் எம்பி செல்வகணபதி ஆகியோர் தங்களது பதவியை இழக்க நேரிட்டது. தற்போது அந்த வரிசையில் பொன்முடியும் தனது அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை இழந்துள்ளார். இதனால் வழக்கு நிலுவையில் உள்ள திமுக அமைச்சர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

தண்டைன பெற்ற விஐபி தம்பதிகள்...! பொன்முடியும், அவரது மனைவியும் சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றதுபோல ஏற்கெனவே முன்னாள் அமைச்சர்கள் சத்தியமூர்த்தி அவரது மனைவி சந்திரா, பொன்னுச்சாமி அவரது மனைவி பிரபாவதி, அ.மா.பரமசிவம், அவரது மனைவி நல்லம்மாள், இந்திராகுமாரி அவரது கணவர் பாபு ஆகியோர் தம்பதி மற்றும் குடும்பத்தினர் சகிதமாக சிறை தண்டனை பெற்றுள்ளனர் என்பது குறி்ப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x