Published : 30 Jan 2018 09:56 AM
Last Updated : 30 Jan 2018 09:56 AM

சென்னை, மதுரை உயர் நீதிமன்றங்களில் அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமனத்துக்கு இடைக்கால தடை

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமனத்துக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ.கண்ணன் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநலன் மனு:

தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக திறமை, தகுதியை கருத்தில் கொள்ளாமல் ஆளும் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்களே உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்படுபவர்கள் பதவிக்கு வந்தபிறகும் தாங்கள் சார்ந்த கட்சிகளுக்கு ஆதரவாகவே செயல் படுகின்றனர்.

இதையடுத்து அரசு வழக்கறிஞர் நியமனம் செய்யும்போது திறமை, தகுதி இல்லாமல் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களை மட்டும் அரசு வழக்கறிஞர்களாக நியமனம் செய்யாமல் அனைத்து வழக்கறிஞர்களுக்கும் வாய்ப்பு வழங்குமாறு உரிய சட்டத்திருத்தம் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பாக தமிழக அரசு புதிய விதியை உருவாக்கியது. இந்த விதியிலும் வழக்கறிஞர்களின் தகுதி, திறமையை மதிப்பிட எந்த விதிமுறையும் வகுக்கப்படவில்லை.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு புதிய அரசு வழக்கறிஞர்கள் ஜனவரி 1-ம் தேதி நியமிக்கப்பட்டனர். இவர்களில் சிலர் போதிய அனுபவம் இல்லாதவர்கள். ஒரு வழக்குகூட தாக்கல் செய்யாதவர்கள், கட்டப்பஞ்சாயத்து நடத்தி வருவோர், பார் கவுன்சிலின் ஒழுங்கு நடவடிக்கையை சந்தித்து வருபவர்களும் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை அரசு வழக்கறிஞர் நியமனம் தொடர்பாக பொதுத்துறை முதன்மை செயலர் பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து, அனைத்து வழக்கறிஞர்களிடமும் விண்ணப்பம் பெற்று அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கவும், அதுவரை அரசு வழக்கறிஞர்கள் நியமன அரசாணையை செயல்படுத்த இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர்.தாரணி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர் நீதிமன்றத்தில் போதிய அனுபவம் உள்ளவர்களால்தான் அரசு வழக்கறிஞர்களாக சிறப்பாக பணிபுரிய முடியும் என தெரிவித்த நீதிபதிகள், பின்னர் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமனத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும், அரசு வழக்கறிஞர்களாக நியமனம் செய்யப்பட்டவர்கள் உயர் நீதிமன்றத்தில் எத்தனை ஆண்டுகள் வழக்கறிஞர்களாக உள்ளனர்? எத்தனை வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர் என்பது தொடர்பாக பதிவாளர் ஜெனரல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அரசு வழக்கறிஞர்களாக நியமனம் செய்யப்பட்டவர்கள் எந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டனர் என்பது தொடர்பாக பொதுத்துறை செயலர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை பிப். 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x