அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 32 சங்கங்கள் ஜன.4-க்கு பிறகு வேலைநிறுத்தம் செய்ய முடிவு: போக்குவரத்துத் துறை செயலரிடம் நோட்டீஸ் வழங்கப்பட்டது

அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 32 சங்கங்கள் ஜன.4-க்கு பிறகு வேலைநிறுத்தம் செய்ய முடிவு: போக்குவரத்துத் துறை செயலரிடம் நோட்டீஸ் வழங்கப்பட்டது
Updated on
1 min read

சென்னை: போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி அண்ணா தொழிற்சங்கம் தலைமையில் இயங்கும் கூட்டமைப்பினர் வேலைநிறுத்த நோட்டீஸை துறைச் செயலரிடம் நேற்று வழங்கினர்.

அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கப் பேரவை, தமாகா, பாமக,தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்டகட்சிகளின் தொழிற்சங்கங்கள் உட்பட 32 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், கடந்த 17-ம்தேதி நடத்திய ஆலோசனைக்குப் பிறகு, போக்குவரத்துக் கழகங்களில் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்குவதாக அறிவித்தனர். இதன் தொடர்ச்சியாக சென்னை, தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டியை அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலர் ஆர்.கமலகண்ணன் தலைமையிலான நிர்வாகிகள் நேற்று சந்தித்து வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கமலகண்ணன் கூறியதாவது: கடந்த அதிமுக ஆட்சி காலத்தில்3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் திமுக அரசு ஆட்சிக்குவந்தவுடன் அதை 4 ஆண்டுகளாகமாற்றம் செய்தது. அதேபோல், ஓய்வு பெற்று உயிரிழந்த தொழிலாளர்களுக்கு மட்டுமே பணப்பலன் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் உயிருடன் இருக்கும்போது பணப்பலனை அனுபவிக்க முடியாத நிலையே இருக்கிறது. ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி உயர்வும் நீதிமன்றம் உத்தரவிட்டபோதும் அரசு வழங்கவில்லை. மாறாக மேல்முறையீடு செய்துள்ளது. இவையனைத்துக்கும் மேலாக போக்குவரத்துக் கழகங்கள் ரூ.50ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்குகின்றன. இதை மீட்டெடுப்பது சாத்தியமல்ல.

எனவே, ஊழியர்கள் அனைவரையும் அரசு ஊழியர்களாக்க வேண்டும். ஏற்கெனவே அரசின் கீழ் இருந்த துறை தான் தற்போது கழகங்களாக செயல்படுகின்றன. அண்டை மாநிலங்களில் போக்குவரத்துக் கழகங்களும் அரசின் கீழ் இயங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கூறிய திமுக அரசு, இதுவரை எந்தநடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. இதனால் ஊழியர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, போக்குவரத்துக் கழக ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, முதல்கட்டமாக துறைச் செயலரிடம் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கியுள்ளோம். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், வரும் ஜனவரி 4-ம் தேதி முதல் 6 வார காலத்துக்குள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in