ஜன.4-க்கு பிறகு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்: நிர்வாக மேலாண் இயக்குநர்களிடம் 16 சங்கங்கள் நோட்டீஸ் வழங்கின

ஜன.4-க்கு பிறகு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்: நிர்வாக மேலாண் இயக்குநர்களிடம் 16 சங்கங்கள் நோட்டீஸ் வழங்கின
Updated on
1 min read

சென்னை: போக்குவரத்து ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஜன.4-க்குப் பிறகு வேலைநிறுத்தம் நடைபெறும் என்று 16 சங்கங்கள் அடங்கிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன. இதுதொடர்பாக சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எஃப் உள்ளிட்ட 16 சங்கங்கள் ஆலோசித்து வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்குவதாக அண்மையில் முடிவு செய்தன.

இதைத்தொடர்ந்து, மாநிலம் தழுவிய அளவில் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களிடம் 16 சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் வேலைநிறுத்த அறிவிப்பை நேற்று வழங்கினர். இதன் ஒருபகுதியாக சென்னையில் உள்ள பல்லவன் சாலையில் 16 சங்கங்களின் தலைவர்கள் பேரணியாகச் சென்று விரைவு போக்குவரத்து கழகம், மாநகர போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றின் பொறுப்பு அதிகாரிகளிடம் நோட்டீஸ் வழங்கினர்.

இதன் பின்னர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

போக்குவரத்துக் கழகங்களில் பேருந்துகளை முழுமையாக இயக்கி, மக்களின் பயண உரிமையை பாதுகாக்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு வழங்க வேண்டும், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு 99 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த அறிவிப்பை கொடுத்துள்ளோம்.

வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு திரட்டும் வகையில் டிச.30, 31 மற்றும் ஜன.2 ஆகிய தேதிகளில் அனைத்து பேருந்து நிலையங்களிலும் மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்த உள்ளோம். வேலைநிறுத்த அறிவிப்பு கொடுத்து 14 நாட்களுக்குப் பிறகு வேலை நிறுத்தத்தில் ஈடுபடலாம். ஆகவே, ஜன.4 அன்று பெருந்திரள் போராட்டம் நடத்தி வேலைநிறுத்த தேதி அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in