சீன ஆய்வு கப்பலுக்கு அனுமதி கிடையாது: இலங்கை வெளியுறவு அமைச்சர் தகவல்

யுவான் வாங்க் 5 கப்பல்
யுவான் வாங்க் 5 கப்பல்
Updated on
2 min read

ராமேசுவரம்: இலங்கையின் கடற்பரப்பில் மற்றொரு ஆய்வு கப்பலை அடுத்த மாதம் நிறுத்துவதற்கு சீனா அனுமதி கோரியிருந்த நிலையில், அடுத்த ஓராண்டுக்கு வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களை இலங்கை கடற்பரப்புக்குள் அனுமதிக் கப்போவதில்லை என அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். சீன ராணுவத்தின் விண்வெளி, சைபர், மின்னணு படைப் பிரிவு சார்பில் பல்வேறு பெயரில் உளவுக் கப்பல்கள் இயக்கப்படுகின்றன. இந்தக் கப்பல்களை ஆய்வுக் கப்பல் என்று சீன அரசு கூறி வந்தாலும் இவை அபாயகரமான உளவுக் கப்பல்கள் என்று அமெரிக்க, ஐரோப்பிய பாதுகாப்புத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக இலங்கைக்கு சீனாவிலிருந்து ஷின் யான் 1, 3, 6, சியாங் யாங் ஹாங் 1, 3, 6, 18, 19 உளவு மற்றும் போர் கப்பல்கள் வருகை தந்துள்ளன. கடந்த 2022-ல் யுவான் வாங்க் 5 என்ற போர் கப்பலும், 2023-ம் ஆண்டில் ஹய் யாங் 24 ஹவோ மற்றும் ஷின் யான் 6 என இரண்டு ஆய்வுக் கப்பல்களையும் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி இலங்கை தனது கடற்பரப்பில் நுழைய அனுமதி வழங்கியது. சீனாவின் உளவு மற்றும் போர் கப்பல்களின் மூலம் சுற்று வட்டாரத்தில் 750 கி.மீ. தூரம் வரையிலான இடங்களைக் கண்காணிக்க முடியும்.

அமைச்சர் அலி சப்ரி
அமைச்சர் அலி சப்ரி

அந்த வகையில், இலங்கைக்கு மிக அண்மையில் உள்ள இந்தியாவின் ஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம், கல்பாக்கம் அணு மின் நிலையம், கூடங்குளம் அணு மின் நிலையம் மற்றும் இந்தியாவின் தென் மாநிலங் களில் அமைந்திருக்கும் 6 கடற்படைத் தளங்களை இந்தக் கப்பல் உளவு பார்க்க வாய்ப்பு உள்ளது. இதனால், சீன கப்பல்களின் வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இலங்கைக்கு அதிக கடன் வழங்கியுள்ள நாடாக சீனா உள்ளது. அதுபோல இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் இந்தியா 3.5 பில்லியன் டாலர் கடனை வழங்கி உள்ளதுடன் எரிபொருள், மருந்துகள், அரிசி, பால் பவுடர் மற்றும் உணவுப் பொருட்களையும் கொடுத்து உதவியுள்ளது. இந்நிலையில், 2024-ம் ஆண்டு ஜனவரியில் இலங்கையின் கடற்பரப்பில் மற்றுமொரு ஆய்வுக் கப்பலை நிறுத்துவதற்கு சீனா அனுமதி கோரியிருந்தது.

இதுகுறித்து இலங்கைத் தலைநகர் கொழும்புவில் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் அலி சப்ரி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: இலங்கையின் கடற்பரப்பில் ஆய்வு மேற்கொள்வதற்கு வெளிநாட்டுக் கப்பல்களை ஓராண்டு காலத்துக்கு (2024) அனுமதி வழங்கப் போவதில்லை. இலங்கையில் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்க இருப்பதால் புவிசார் அரசிய|லுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும், எந்த நாட்டையும் பகைத்துக் கொள்ளாமல் செயல்படவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தகைய ஆய்வு நடவடிக்கைகளின்போது இலங்கை சில திறன் மேம்பாடுகளைச் செய்ய வேண்டியிருப்பதால் இத்தகைய அவகாசம் தேவைப் படுகிறது. இதுகுறித்து அனுமதி கோரிய நாடுகளுக்கும் தெரியப் படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in