Published : 27 Jan 2018 08:38 AM
Last Updated : 27 Jan 2018 08:38 AM

நேரு பூங்கா - சென்ட்ரல் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடக்கம்: ஓரிரு மாதத்தில் சென்னை விமான நிலையத்துக்கு நேரடி சேவை என அதிகாரிகள் தகவல்

நேரு பூங்காவில் இருந்து சென்னை சென்ட்ரல் இடையே மெட்ரோ ரயில் சோதனை நேற்று தொடங்கியது. இதற்கிடையே, அடுத்த ஓரிரு மாதங்களில் சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக நேரடி சேவை தொடங்கு வோம் என மெட்ரோ ரயில் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கிமீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், 24 கிமீ தூரத்துக்கு (19 ரயில் நிலையங்கள்) சுரங்க வழிப்பாதை வழியாக ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதுவரையில் 28 கிமீ தூரம் பணிகள் முடிந்து ரயில்சேவை தொடங்கப்பட்டுள்ளது.

ரயில்களில் கூட்டம்

சமீபத்தில் திருமங்கலத்தில் இருந்து நேரு பூங்காவுக்கு சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில்சேவை தொடங்கப்பட்டுள்ளது. மாநகர பஸ் கட்டணமும் உயர்ந்துள்ளதால், மெட்ரோ ரயில்களில் மக்கள் பயணம் செய்வது அதிகரித்து வருகிறது. எஞ்சியுள்ள நேரு பூங்கா, எழும்பூர் மற்றும் சென்ட்ரல் மற்றும் அண்ணாசாலை வழியாக விமான நிலையத்தை இணைக்கும் பணிகளில், மெட்ரோ ரயில் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது.

இதுதொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் அடுத்தகட்டமாக நேரு பூங்கா – எழும்பூர் - சென்ட்ரல் வரையில் 2.5 கிமீ தூரத்துக்கு சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் சோதனை தொடங்கியுள்ளது.

மெட்ரோ ரயில் இயக்கம், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அடுத்தடுத்து, பல்வேறு கட்டமாக ஆய்வுப் பணிகளும், மெட்ரோ தொடர் சோதனை ஓட்டமும் நடக்கும். சோதனை ஓட்டம் நிறைவடைந்தவுடன், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நடத்தி, இந்த தடத்தில் மெட்ரோ ரயில்களை இயக்க அனுமதி அளிப்பார்.

எனவே, அடுத்த ஓரிரு மாதங்களில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து எழும்பூர், கோயம்பேடு வழியாக விமான நிலையத்துக்கு நேரடி மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x