Published : 31 Jul 2014 09:00 AM
Last Updated : 31 Jul 2014 09:00 AM

தனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்க தடை: பேரவையில் மசோதா தாக்கல்

தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்குவதை தடை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சட்ட மசோதா பேரவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, புதன்கிழமை தாக்கல் செய்த சட்டமசோதாவில் கூறப்பட்டிருப்பதாவது:

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 41-வது பிரிவில் குறிப்பிட்டுள்ளதற்கு ஏற்ப, குறைந்த செலவில் சட்டக் கல்வியை வழங்குவதற்காக தமிழகத்தில் படிப்படியாக போதிய எண்ணிக்கையிலான சட்டக் கல்லூரிகளை நிறுவுவதற்கு அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது.

பொருளாதாரத்திலும் சமூகத்திலும் பின்தங்கிய பிரிவினருக்கு குறைந்த செலவில் சட்டக் கல்வியை தனிநபர்கள் அளிக்க முடியவில்லை என்பதை கடந்தகால அனுபவங்கள் எடுத்துரைக்கின்றன. அவர்களால் சட்டக் கல்லூரியைத் தொடர்ந்து நடத்தவும் முடியவில்லை.

எனவே, தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரிகள் நிறுவுவதை தடை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுகிறது.

இவ்வாறு மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x