Published : 17 Dec 2023 03:46 PM
Last Updated : 17 Dec 2023 03:46 PM

ரேஷன் கார்டு இல்லாதவர்கள் ரூ.6,000 நிவாரணத் தொகை பெறுவது எப்படி?- தமிழக அரசு விளக்கம்

சென்னை: ரூ. 6,000 நிவாரணத் தொகைக்கான டோக்கன்கள் கிடைக்கப்பெறாத மற்றும் குடும்ப அட்டை இல்லாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நியாய விலைக் கடைகளில், அதற்கென உரிய படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்கள் நிவாரணத் தொகை குறித்த தங்களது சந்தேகங்களை 044-2859 2828 மற்றும் 1100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் வாயிலாகவும் தொடர்பு கொண்டு கேட்டறியலாம் எனவும் கூறியுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணத் தொகையாக ரூ.6000 (ரூபாய் ஆறாயிரம் மட்டும்) வழங்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்க ஏதுவாக டோக்கன்கள் வீடுவீடாக சென்று விநியோகிக்கப்பட்டு வருகிறது. டோக்கன்கள் கிடைக்கப்பெற்றவர்கள், அதில் குறிப்பிட்ட தேதியிலும், நேரத்திலும், குறிப்பிட்டுள்ள நியாய விலைக் கடைக்கு சென்று ரூ.6000 பெற்றுக்கொள்ளளாம். டோக்கன்கள் கிடைக்கப்பெறாத மற்றும் குடும்ப அட்டை இல்லாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நியாய விலைக் கடைகளில், அதற்கென உரிய படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தமிழக முதல்வர் இன்று (டிச.17) சென்னை, வேளச்சேரி, அஷ்டலட்சுமி நகரில் உள்ள நியாய விலைக் கடையில் காலை 10 மணிக்கு மிக்ஜாம் புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரணத் தொகை வழங்கி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மற்ற நியாய விலைக் கடைகளில் காலை 10.15 மணிக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. முழுமையாக வாசிக்க > ரூ.6,000 வெள்ள நிவாரணம் வழங்கும் திட்டம்: வேளச்சேரியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

அடுத்து வரும் நாட்களில், நியாய விலைக் கடைகளில் முற்பகல் 9 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரையும் நிவாரணத் தொகை மற்றும் படிவம் வழங்கப்படும்., மேற்படி நிவாரணத் தெகை பொதுமக்களுக்கு எவ்வித புகாருக்கும் இடமின்றி வழங்கிடவும், புகார் எழும் சூழலில், அதனை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அலுவலர்களின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு நல்கிடவும் ஏதுவாக சென்னை, சேப்பாக்கம் எழிலகத்தில் அமைந்துள்ள உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் / ஆணையாளர் அலுவலகத்தில் டிச.17 முதல், காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கட்டுப்பாட்டு அறை செயல்படும். பொதுமக்கள் நிவாரணத் தொகை குறித்த தங்களது சந்தேகங்களை 044-2859 2828 மற்றும் 1100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் வாயிலாகவும் தொடர்பு கொண்டு கேட்டறியலாம், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x