Published : 29 Jan 2018 08:55 AM
Last Updated : 29 Jan 2018 08:55 AM

கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை தொடர்ந்து வீழ்ச்சி: பீட்ரூட், கத்தரி, கோஸ், முள்ளங்கி கிலோ ரூ.5-க்கு விற்பனை

கோயம்பேடு சந்தைக்கு காய்கறி கள் வரத்து அதிகரிப்பால் அங்கு காய்கறிகளின் விலை வீழ்ச்சி தொடர்ந்து நீடித்து வருகிறது.

கோயம்பேடு சந்தையில் கடந்த 4 வாரங்களாக காய்கறிகள் வரத்து அதிகமாக உள்ளது. ஆந்திர, கர்நாடக மாநிலங்கள் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் காய்கறிகள் விலை வீழ்ச்சி தொடர்ந்து நீடித்து வருகிறது.

நேற்றைய நிலவரப்படி சந்தையில், முள்ளங்கி, கோஸ், புடலங்காய், நூக்கல், கத்தரிக்காய் ஆகிய காய்கறிகள் விலை கிலோ ரூ.5 ஆக வீழ்ச்சி அடைந்திருந்தது. மேலும் தக்காளி ரூ.6, பீட்ரூட் ரூ.7, உருளைக்கிழங்கு ரூ.9, பீன்ஸ் ரூ.12 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெங்காயம் ரூ.30-க்கும், சின்ன வெங்காயம் ரூ.32-க்கும், வெண்டைக்காய் ரூ.20-க்கும் விற்கப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக கோயம்பேடு மலர், காய், கனி வியாபாரிகள் நலச் சங்க செயலர் எஸ்.எஸ். முத்து குமார் கூறியதாவது:

இதற்கு முன்பு கோயம்பேடு சந்தைக்கு 350 லோடு காய்கறிகள் வந்துகொண்டிருந்தன. தற்போது அதிகபட்சமாக 450 லோடுகள் வருகின்றன. வழக்கமாக தமிழக பகுதிகளில் இருந்து காய்கறிகள் குறைவாக வரும். ஆனால் இந்த ஆண்டு தமிழகத்தில் நல்ல மழை பெய்துள்ள நிலையில், கிருஷ்ணகிரி, ஓசூர், பண்ருட்டி, திண்டிவனம், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் அதிக அளவில் வருகின்றன. அழுகி வீணாக குப்பையில் கொட்டக்கூடாது என்பதால் விலை குறைத்து அவற்றை விற்பனை செய்ய வேண்டியுள்ளது. அதனால் பல்வேறு காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு வியாபாரம் இல்லை.

தற்போது பஸ் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் வெளியில் இருந்து பொதுமக்கள் வருவது குறைந்துள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x