ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்தக்கூடாது: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்தக்கூடாது: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்திய நிலையில், விற்பனை விலையை உயர்த்தக்கூடாது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆவின் நிறுவனம், பால் உற்பத்தியாளர்களின் வேண்டுக்கோளுக்கு இணங்க லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 உயர்த்தி இருக்கிறது. இதனால் 4 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன் பெறுவர். கால்நடைக்கான இடுபொருள் விலை, உற்பத்தி செலவினம் அதிகரித்ததால் பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்திருந்தனர். தற்போது ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்துள்ளது.

அதை ஈடுகட்ட, ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்தக் கூடாது. ஏற்கெனவே, பால் பொருட்களின் விலையை ஆவின் உயர்த்தியுள்ளது. எனவே, பால் விற்பனை விலையை மீண்டும் உயர்த்தினால் நுகர்வோர் பெரிதும் பாதிக்கப்படுவர். ஆவின் நிறுவனத்தின் செயல்பாடுகள், பால் உற்பத்தியாளர்களையும், நுகர்வோரையும் பாதுகாப்பதாகவே அமைய வேண்டும். மற்ற மாநிலங்களில் இருந்து பால் கொள்முதல் செய்வதை கைவிட்டு, தமிழக உற்பத்தியாளர்களிடமே கொள்முதல் செய்ய வேண்டும். இதனால் உற்பத்தியாளர்களுக்கும் பயன் கிடைக்கும், ஆவின் நிறுவனத்துக்கும் கொள்முதல் அளவும் உயர்ந்து, பால் தட்டுப்பாடும் விலகும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in