Published : 08 Jan 2018 08:56 AM
Last Updated : 08 Jan 2018 08:56 AM

‘ஒன்றே பாரதம் ஒப்பிலா பாரதம்’ திட்டம்: மாமல்லபுரத்தில் ஜம்மு காஷ்மீர் நடன நிகழ்ச்சி

‘ஒன்றே பாரதம் ஒப்பிலா பாரதம்’ என்ற திட்டத்தின்கீழ் மாமல்லபுரத்தில் நேற்று ஜம்மு காஷ்மீர் மாநில நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சர்தார் வல்லபாய் படேலின் 140-வது பிறந்த ஆண்டை முன்னிட்டு ‘ஒன்றே பாரதம் ஒப்பிலா பாரதம்’ என்ற திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாடு- ஜம்மு காஷ்மீர் மாநிலங்களுக்கிடையே உள்ள கலாச்சார ஒற்றுமையை மேம்படுத்திடும் விதமாக ஜம்மு காஷ்மீர் மாநில பாரம்பரிய கலைக்குழுவினர் பங்குபெறும் கலை நிகழ்ச்சிகள் நேற்று மாலை மாமல்லபுரத்தில் நடைபெற்றது.

இந்த கலை நிகழ்ச்சியில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாரம்பரிய கலை வடிவங்களான டோக்ரி நடனம், காஷ்மீரி நடனம், லடாக்கி நடனம், தாம்பாலி நடனம், பாக் நாக்மா, கோஜ்ரி நடனம், அரன், கீத்ரு, சஜ்ஜா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த நிகழ்ச்சி யைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் மாநில கலைக் குழுவினர் நாளை (9-ம் தேதி) மாலை தஞ்சை பெரிய கோவிலிலும், 10-ம் தேதி மாலை மதுரை காந்தி அருங்காட்சியகத்திலும் கலை நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளனர்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x