

சென்னை: போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பாடல் காணொலியை டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்டார். மேலும் விழிப்புணர்வு மேற்கொள்ள மாணவர் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. போதைப் பொருட்கள் இல்லா மாநிலமாகத் தமிழகத்தை மாற்றவேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அண்மையில் அழைப்பு விடுத்தார். அதன் தொடர்ச்சியாக போதைப் பொருட்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், முற்றிலும் ஒழிக்கவும் போலீஸார் (அமலாக்கப் பணியகம்) பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரிகளில் 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட போதைக்குஎதிரான மாணவர் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. அது மட்டும் அல்லாமல் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடர்ந்து மேற்கொள்ள சிறப்புத் தன்னார்வலர் திட்டம் உருவாக்கப்பட்டது. மேலும், போதைப் பொருட்கள் எதிர்ப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன.
50 ஆயிரம் பேருக்கு பேட்ஜ்: இந்த குழுவில் உள்ள பொறுப்பாளர்கள் 50 ஆயிரம் பேருக்கு சிறப்புபேட்ஜ்கள் வழங்கப்பட உள்ளன. இந்நிலையில், போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு பாடல் காணொலியை டிஜிபி சங்கர் ஜிவால், டிஜிபி அலுவலகத்தில் நேற்று வெளியிட்டார். இந்த பாடலுக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து இருந்தார். மேலும், போதைப் பொருட்களுக்கு எதிராக ரீல்ஸ், ரீமிக்ஸ்பாடல் மற்றும் கானா பாடல்களை உருவாக்கியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், அமலாக்கப் பணியகபிரிவு கூடுதல் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால், ஐஜி ராதிகா, இசையமைப்பாளர் ஜிப்ரான் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.