நியோமேக்ஸ் மோசடி வழக்கில் போலீஸ் நடவடிக்கை போதுமானது அல்ல: உயர் நீதிமன்றம் அதிருப்தி

நியோமேக்ஸ் மோசடி வழக்கில் போலீஸ் நடவடிக்கை போதுமானது அல்ல: உயர் நீதிமன்றம் அதிருப்தி
Updated on
1 min read

மதுரை: ‘நியோமேக்ஸ் மோசடி வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரின் தற்போதைய நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை’ என உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

தஞ்சாவூரைச் சேர்ந்த கவுதமி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: “மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் நிதி நிறுவனம் தமிழகம் முழுவதும் பல ஆயிரம் பேரிடம் கூடுதல் வட்டி மற்றும் வீட்டடி மனை தருவதாக கூறி பல ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்தது. இந்த மோசடி குறித்து மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, நியோமேக்ஸ் இயக்குனர்கள், முகவர்கள் என பலரை கைது செய்தனர். இவர்களில் சிலர் ஜாமீனில் வெளிவந்துள்ளனர்.
நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தில் நான் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ரூ.1 கோடி முதலீடு செய்தேன். வட்டியும் தரவில்லை. வீட்டடி மனையும் வழங்கவில்லை. முதலீட்டாளர்களின் பணத்தை நிதி நிறுவன இயக்குனர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளனர்.

நியோமேக்ஸ் மோசடி வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சரியாக விசாரிக்கவில்லை. விசாரணை அதிகாரிகள் சிலர் மோசடியில் தொடர்புடையவர்களுக்கு உதவி வருகின்றனர். முக்கிய குற்றவாளிகளை கைது செய்வதில் போலீஸார் வேண்டும் என்றே தாமதம் செய்து வருகின்றனர். எனவே நியோமேக்ஸ் மோசடி வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன்பு விசாரணைக்கு வந்தது. பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் முக்கிய நிர்வாகிகள் வீரசக்தி, பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்புக்கு மேற்பட்ட சொத்துகள் கண்டறியப்பட்டுள்ளது. பல்வேறு வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்றார்.

இதையடுத்து நீதிபதி, “நியோமேக்ஸ் மோசடி வழக்கு விசாரணையை பொருளாதார குற்றப்பரிவு போலீஸார் இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். இந்த வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரின் தற்போதைய நடவடிக்கை போதுமானதாக இல்லை. நியோமேக்ஸ் மோசடி வழக்கில் இன்னும் எத்தனை பேர் கைது செய்யப்பட வேண்டும்? தற்போது வரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? தலைமறைவாக உள்ள முக்கிய நபர்கள் யார்?

நியோமேக்ஸ் முதலீடு செய்தவர்கள் எத்தனை பேர்? முடக்கப்பட்டுள்ள நியோமேக்ஸ் நிறுவனத்தின் சொத்து விவரங்கள்? அவற்றின் மதிப்பு? முடக்கப்பட வேண்டிய சொத்துக்களின் விவரங்கள் ஆகியன குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை டிச.18-க்கு ஒத்திவைக்கப்படுகிறது” என உத்தரவிட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in