

சென்னை: “மக்களவைக்குள்ளேயே அரங்கேறியுள்ள பாதுகாப்பு மீறல், நமது மக்களாட்சியின் உயரிய கோயிலான நாடாளுமன்றத்துக்கும் பெரும் அச்சுறுத்தலை உண்டாக்கியிருக்கிறது” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “முன்னெப்போதும் இல்லாத வகையில் நாடாளுமன்ற மக்களவைக்குள்ளேயே அரங்கேறியுள்ள பாதுகாப்பு மீறல், நமது மக்களாட்சியின் உயரிய கோயிலான நாடாளுமன்றத்துக்கும் பெரும் அச்சுறுத்தலை உண்டாக்கியிருக்கிறது.
இதில் தாமதமில்லாத உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உரிய விசாரணை மேற்கொண்டு, இதற்குப் பொறுப்பானவர்களைக் கண்டறிந்து, இனி இப்படி நடக்காத அளவுக்குப் பாதுகாப்பு நடைமுறைகளைச் செயல்படுத்தி, மக்களாட்சியின் மிக முக்கியமான அமைப்பான நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை நம்மிடம் உள்ள அனைத்து வலிமையையும் கொண்டு உறுதிசெய்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.