மதுரை அப்சல் நிதி நிறுவனத்தின் ரூ.1,000 கோடி மோசடி வழக்கில் விசாரணை: அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை அப்சல் நிதி நிறுவனத்தின் ரூ.1,000 கோடி மோசடி வழக்கில் விசாரணை: அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு

Published on

மதுரை: மதுரை அப்சல் நிதி நிறுவன மோசடி வழக்கின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த ரவிச்சந்திரன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரையை தலைமை இடமாக கொண்டு அப்சல் (ஏபிஎஸ்ஏஎல்) நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது.இந்த நிறுவனத்தில் நான் உட்பட 60 ஆயிரம் பேர் மொத்தம் ரூ.1,000கோடிக்கும் மேல் முதலீடு செய்தோம். எங்கள் முதலீட்டுக்குரிய வட்டி மற்றும் முதிர்வுத் தொகை திரும்ப தரவில்லை. இது குறித்து மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸில் 2017-ல் புகார் அளித்தோம். போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலீடு பணத்தை திரும்ப வழங்க ஓய்வுபெற்ற நீதிபதிசுதந்திரம் தலைமையில் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர், அப்சல் நிறுவன மேலாளர் அடங்கிய குழுவை உயர் நீதிமன்றம் அமைத்தது. உயர் நீதிமன்றம் அமைத்த குழுவின் நடவடிக்கைகளுக்கு அப்சல் நிறுவனம் ஒத்துழைக்கவில்லை. இதையடுத்து நீதிபதி சுதந்திரம் குழுவில் இருந்து விலகினார். அப்போது நிதி நிறுவனத்தினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தார்.

கைது நடவடிக்கை எடுக்கவில்லை: இருப்பினும் கடந்த 5 ஆண்டுகளாக போலீஸார் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. மோசடியில் தொடர்புடையவர்களை தப்பிக்க வைக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீ ஸார் உதவி வருகின்றனர். எனவே, பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வரும் அப்சல் நிதி நிறுவன மோசடி வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றி உத்தரவிட வேண் டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டி ருந்தது. இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில்வழக்கறிஞர் மாதவன் வாதிட்டார்.

பின்னர் நீதிபதி தனது உத்தரவில், கோடிக்கணக்கில் மோசடி நடைபெற்றுள்ளது. உயர் நீதிமன்றம் நியமித்த நீதிபதியும் பதவி விலகியுள்ளார். இதனால் அப்சல் நிதி நிறுவன மோசடி தொடர்பாக 2017-ல் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஜன. 5-க்கு தள்ளிவைக்கப்படுகிறது என உத்தர விட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in