கலங்கரை விளக்கம் - கோடம்பாக்கம் தடத்தில் மெட்ரோ சுரங்கப் பணிகள் தீவிரம்

கலங்கரை விளக்கம் - கோடம்பாக்கம் தடத்தில் மெட்ரோ சுரங்கப் பணிகள் தீவிரம்
Updated on
1 min read

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், கலங்கரைவிளக்கம் -பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தில் ஒருபகுதியான கலங்கரைவிளக்கம் - கோடம்பாக்கம் வரையிலான வழித்தடத்தில் திட்டப்பணிகள் தீவிரமடைந்துள்ளன. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான (26.1 கி.மீ.) 4-வது வழித்தடம் ஒன்றாகும். இந்த வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை உயர்மட்டபாதையாகவும் அமைக்கப்படுகிறது.

இந்த வழித்தடத்தில் 9 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும், 18 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும் இடம்பெற உள்ளன. தற்போது, உயர்மட்ட, சுரங்கப்பாதை பணி, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைப்பது ஆகிய பணிகள் பல்வேறு இடங்களில் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் - கோடம்பாக்கம் மேம்பாலம் வரையிலான தடத்தில் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

கலங்கரை - பூந்தமல்லி வரை 4-வது வழித்தடத்தில் சுரங்கப்பாதை பணி கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வழித்தடத்தில் சுரங்கப்பாதை பணிக்கு பிளமிக்கோ, ஈகில், பிகாக், பெலிகான் என மொத்தம் 4 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்த முடிவு செய்து, தற்போது ஒரு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் கலங்கரை விளக்கத்திலும், இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பனகல்பூங்காவிலும் பணியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது, கலங்கரை விளக்கத்தில் இருந்து சுரங்கப்பாதை பணி தொடங்கி, 100.8 மீட்டர் நீளத்துக்கு சுரங்கம் தோண்டும் பணி நிறைவடைந்துள்ளது. இந்த வழித்தடத்தில் பல்வேறு இடங்களில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுதவிர, பனகல் பூங்காவில் சுரங்கப்பாதை பணியை விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். பூந்தமல்லி-கலங்கரை விளக்கம் வரையிலான 4-வது வழித்தடத்தில் ஒரு பகுதியாக கோடம்பாக்கம்-பூந்தமல்லி வரையிலான தடத்தில், உயர் மட்டப்பாதையில் 50 சதவீதம் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்துள்ளன. இத்தடத்தில் பணிகள் அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் நிறைவடைய வாய்ப்பு உள்ளது. இந்த குறிப்பிட்ட பாதையை மக்கள் பயன்பாட்டுக்காக, வரும் 2025-ம் ஆண்டில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in