கனமழை ஓய்ந்தும் 4 நாட்களாக நீர் வெளியேறாதது ஏன்? - தமிழக அரசு விசாரணை நடத்த மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்
மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்
Updated on
1 min read

சென்னை: கனமழை நின்று 4 நாட்களானபோதிலும் நீர் வடியாதது ஏன் எனதமிழக அரசு விசாரணை நடத்தவேண்டும் என மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார்.

கனமழை பாதிப்புகளை பார்வையிடுவதற்காக மத்திய தொழில் முனைவோர், நீர்வளத்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நேற்று சென்னை வந்தார். அவர், காஞ்சிபுரம் மாவட்டத்தின் வரதராஜபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தின் முடிச்சூர் பகுதிகளைபார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பாதிப்பு விவரங்களை ஆட்சியர்கள் ஆ.ர. ராகுல் நாத்மற்றும் கலைச்செல்வி ஆகியோர் புகைப்படங்கள் மூலம் விளக்கினர். தொடர்ந்து மேற்கு மாம்பலம், திருவல்லிக்கேணி பகுதிகளில் மழை பாதிப்புகளை பார்வையிட்ட பின்னர், பாஜக சார்பில் நிவாரணப் பொருட்களையும் அமைச்சர் வழங்கினார்.

இதையடுத்து, பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மிக்ஜாம் புயல்தாக்கத்தின்போது மக்கள் மீண்டுவருவதற்கான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்தது. குறிப்பாக புயல் பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து கண்காணித்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக தமிழக அரசு அதிகாரிகளை சந்தித்து, மக்களை மீட்டெடுக்க தேவையானவை குறித்துஅறிந்து கொள்ளவே அவர் என்னைஅனுப்பினார். சென்னை மற்றும்புறநகர் பகுதியில் புயல் பாதிப்புகளை பார்வையிட்டேன். அலட்சியமே பாதிப்புக்கான காரணம்என பொதுமக்கள் தெரிவித்தனர். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு உதவுவதே மத்தியஅரசின் நோக்கமாக இருக்கிறது. சென்னை மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை உறுதிசெய்வதே எங்களது முதன்மையாககுறிக்கோள். அதே நேரம்,தேங்கியமழைநீர் சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, மழைநின்று 4 நாட்களான போதிலும் தேங்கிய நீர் ஏன் வடியவில்லை என்பது குறித்து தமிழக அரசு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். காவல்துறை ரீதியான விசாரணை என்பது பொருளல்ல. காரணத்தைக் கண்டறிய வேண்டும் என்கிறோம். தமிழகஅரசுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் உதவ தயாராக இருக்கிறோம். இந்த ஆய்வு குறித்து பிரதமரிடம் கூறுவேன்.

இது ஒருபுறமிருக்க, ஊழலுக்காகவே பெயர்போன காங்கிரஸ்கூட்டணி தற்போது ஐஎன்டிஐஏ என்னும் புதிய அவதாரத்தை எடுத்திருக்கிறது. இந்த கூட்டணியில் திமுகவும் இருக்கிறது. இந்த கூட்டணி மக்கள் பணத்தை மீண்டும் மீண்டும் கொள்ளையடிக்கின்றன. தற்போதுகூட அவர்களது நாடாளுமன்ற உறுப்பினர், ஒப்பந்ததாரர் வீடுகளில் கோடிக்கணக்கிலான பணம் கைப்பற்றப்பட்டுள்ளன. இதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in