Published : 22 Jan 2018 12:12 PM
Last Updated : 22 Jan 2018 12:12 PM

தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக: திருநாவுக்கரசர்

மின்வாரிய நிர்வாகமும் தமிழக அரசும் தொழிற்சங்கத் தலைவர்களை அழைத்துப் பேசி, மின்வாரிய ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2015 டிசம்பர் மாதம் முதல் புதிய ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை ஊழியர்களுக்கு புதிய ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை.

புதிய ஊதிய உயர்வையும், நிலுவைத் தொகையையும் உடனடியாக வழங்க ஆணை பிறப்பிக்காவிட்டால் 23.1.2018 முதல் அனைத்து தொழிற்சங்கங்களும் சேர்ந்து வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். இதற்கிடையே நிர்வாகத்திற்கும், தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 2.37 சதவீத உயர்வு வழங்க நிர்வாகம் முன்வந்தது. இதை தொழிற்சங்கத் தலைவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். பின்பு 2.57 சதவீத ஊதிய உயர்வும் 1.10.2017 முதல் நிலுவைத் தொகையையும் வழங்க நிர்வாகம் முன் வந்தது.

ஆனால் தொழிற்சங்கத் தலைவர்கள் 2.57 சதவீத ஊதிய உயர்வும், 1.12.2015 முதல் நிலுவைத் தொகையையும் வழங்க வேண்டுமென்று நிர்வாகத்திடம் உறுதியாக தெரிவித்துவிட்டனர். மின்வாரிய நிர்வாகம் ஊழியர்களுக்கு 2.44 சதவீத ஊதிய உயர்வு மட்டும் தான் வழங்க முடியுமென்றும், நிலுவைத் தொகையை வழங்க முடியாது என்றும் தொழிற்சங்கத் தலைவர்களிடம் நிர்வாகம் தெரிவித்துவிட்டது.

மேலும் வாரியத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளில் ஒப்பந்த முறையில் 15 ஆண்டுகளாக பணியாற்றி வரும் சுமார் 5000 ஊழியர்களையும், ஏழு ஆண்டுகளாக பணியாற்றி வரும் சுமார் 6000 ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென்றும், பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 40,000 காலி பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டுமென்றும் கோரிக்கை வைத்துள்ளனர். மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் 23.1.2018 முதல் மின்வாரிய அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

எனவே, மின்வாரிய நிர்வாகமும் தமிழக அரசும் தொழிற்சங்கத் தலைவர்களை அழைத்துப் பேசி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென்றும் 23.1.2018 அன்று ஊழியர்கள் நடத்த உத்தேசித்துள்ள போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்றும் தமிழக அரசை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். மேலும் மின்வாரியத் தொழிலாளர்களின் நியாயமான போராட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி என்றும் துணை நிற்கும்'' என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x