Published : 08 Dec 2023 06:25 AM
Last Updated : 08 Dec 2023 06:25 AM

ஜீவசமாதி அடைய வைக்க முயற்சித்ததாக புகார் - உடல்நலம் பாதிக்கப்பட்ட சிவகங்கை சாமியார் மீட்பு

சாமியார் சுரேந்தர்

சிவகங்கை: சிவகங்கையில் சாமியாரை ஜீவசமாதி அடைய வைக்க முயற்சித்ததாக புகார் எழுந்த நிலையில், நகராட்சித் தலைவர் சி.எம்.துரைஆனந்த் மற்றும் போலீஸார் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிவகங்கை மேலவாணியங் குடியில் மானாமதுரை - தஞ்சை புறவழிச் சாலையில் உள்ள ஆசிரமத்தில் தங்கி மதுரையைச் சேர்ந்த சாமியார் சுரேந்தர் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தார். மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சென்றனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அந்த சாமியாரை பார்க்க சிலர் அனுமதி மறுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் சாமியாரை ஜீவசமாதி அடைய வைக்க முயற்சிப்பதாகவும், அதற்காக அவருக்கு உணவு வழங்காமல் உடல்நலம் பாதிக்கப் பட்டிருப்பதாகவும் தெரியவந்தது.

இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த பக்தர்கள் சிலர், சிவகங்கை நகராட்சித் தலைவரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து நகராட்சித் தலைவர் சி.எம்துரைஆனந்த், நகர் காவல் ஆய்வாளர் கோட்டைச்சாமி தலைமையிலான போலீஸார் அங்கு சென்றனர். பின்னர் உடல் நலம் பாதிக்கப்பட்ட சாமியாரை மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். சி.எம்.துரைஆனந்த் கூறுகையில், உடல்நலம் மிகவும் மோசமாக உள்ள சாமியாருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரை தொடர்ந்து கண்காணிக்குமாறு போலீஸாரிடம் தெரிவித்துள்ளோம் என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x