Published : 30 Jan 2018 07:53 AM
Last Updated : 30 Jan 2018 07:53 AM

உலக முதலீட்டாளர்கள் மாநாடு எப்போது? - அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை

உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து அமைச்சர்களுடன் முதல்வர் கே.பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

கடந்த 2015-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடத்தப்பட்டது. இதில், 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இவற்றின் மூலம் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகள் உறுதி செய்யப்பட்டன.

இதைத் தொடர்ந்து, தொழில் நிறுவனங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் அனைத்து துறைகளின் அனுமதிகளை வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இவற்றில் 61 திட்டங்கள் மூலம் ரூ.62,738 கோடிக்கான திட்டப்பணிகள் தொடங்கப்பட்டதாகவும் இதன்மூலம் 76,777 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டதாகவும் தமிழக அரசு தெரிவித்தது.

இந்நிலையில், 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவதற்கான பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. சமீபத்தில், இந்திய தொழில் கூட்டமைப்பைச் சேர்ந்த பல்வேறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் முதல்வரைச் சந்தித்தனர். அப்போது முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் துறை அதிகாரிகள் கூட்டம் நேற்று காலை நடந்தது.

அதைத் தொடர்ந்து பிற்பகலில் முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதில், துணை முதல்வர் ஓ.பன்னீ்ர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், எம்.சி.சம்பத், பி.பெஞ்சமின், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தொழில் துறை செயலாளர் ஞானதேசிகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை எப்போது, எங்கு நடத்துவது, மாநாட்டுக்கு முந்தைய நடவடிக்கைகள், தொழில் நிறுவனங்களை ஈர்க்க உருவாக்க வேண்டிய கட்டமைப்பு பணிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தொழில் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான தேதியை முதல்வர் விரைவில் வெளியிடுவார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x