Published : 03 Jan 2018 08:25 PM
Last Updated : 03 Jan 2018 08:25 PM
அண்ணா சாலை சிம்சன் பாலம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் மீது பின்னால் வந்த மாநகரப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழந்தார்.
இன்று மாலை 6 மணி அளவில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நேரத்தில் சென்னை அண்ணா சாலை சிம்சனிலிருந்து சென்ட்ரல் நோக்கி வாகனங்கள் வேகமாக சென்று கொண்டிருந்தன.
வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்திச்செல்லும் போக்குவரத்து நெரிசல் மிக்க பாலத்தில் மகேந்திரா சொகுசு கார் ஒன்று திடீரென பிரேக் பிடித்து நின்றுள்ளது. அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் ஒருவர் அந்த வாகனத்தின் மீது மோதி நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
அப்போது அவருக்குப் பின்னால் வேகமாக வந்த 32பி மாநகரப் பேருந்து இளைஞர் மீது ஏறியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழந்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த சிந்தாதிரிப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீஸார் இளைஞர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த இளைஞர் பெயர் செய்யது அலி என்ற தகவல் மட்டுமே கிடைத்துள்ளது. மற்ற விவரங்கள் கிடைக்கவில்லை.
விபத்து நடந்த பாலம் அருகில் உள்ள பெரியார் சிலை சிக்னலில் போக்குவரத்து போலீஸார் நிற்பதில்லை என்றும், அப்படியே நின்றாலும் எங்காவது ஓரு ஓரத்தில் நிற்பதும் வாடிக்கை. இதனால் சிக்னலை மதிக்காமல் வாகனங்கள் செல்வதால் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டுதான் வாகனத்தை ஓட்ட வேண்டி உள்ளது என அங்குள்ள வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டினர்.
அதே போல் வாலிபர் மோதி விழுந்த வாகனம் அரசு வாகனம் என்றும் அந்த வாகனம் நிற்காமல் சென்று விட்டதாகவும் அதன் எண்ணை போலீஸாரிடம் குறித்துக் கொடுத்துள்ளதாகவும் அங்கிருந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT