

அரக்கோணம்: அரக்கோணம் இரட்டைக்கண் ரயில்வே சுரங்க பாதையில் மழைநீர் தேங்குவதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சிகளின் மண்டல இயக்குநர் தனலட்சுமி தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பழனிப்பேட்டை பகுதியில் இரட்டைக்கண் ரயில்வே சுரங்க பாதை உள்ளது. இங்கு, மழைக் காலங்களில் தண்ணீர் தேங்குவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். மழைநீர் தேங்காத வண்ணம் இதனை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் தரப்பில் அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது.
அவ்வப்போது, நகராட்சி சார்பில் மழைநீர் தேங்கினால் அப்புறப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த இடத்தை வேலூர் மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் தனலட்சுமி நேற்று ஆய்வு செய்தார். வரும் காலங்களில் இங்கு மழைநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
அப்போது, திமுக நகராட்சி மன்ற குழு தலைவரும், கவுன்சிலருமான துரை. சீனிவாசன், ஆணையாளர் ரகு ராமன் உட்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.