உணவு, நீர், பால் உள்ளிட்ட பொருட்களை முன்கூட்டியே கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்: பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்

உணவு, நீர், பால் உள்ளிட்ட பொருட்களை முன்கூட்டியே கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்: பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: பொது மக்கள் தேவையில்லாமல் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து, ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மிக்ஜாம் புயல் சென்னைக்கு மிக அருகில் கடந்து செல்வதால், மிக கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

குறிப்பாக, இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரப்பூர்வமான அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். அதிகாரப்பூர்வ தகவல்களுக்காக வானொலி மற்றும் தொலைக்காட்சியை தொடர்ந்து கவனிக்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின் பேரில் முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும்.

முக்கியப் பொருட்கள் மற்றும் ஆவணங்களை நீர் புகா வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும். ஒரு சில நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான உணவு, நீர், பால் மற்றும் மருந்துகளை கையிருப்பில் வைக்க வேண்டும். கயிறு, மெழுகுவர்த்தி, கைமின் விளக்கு, அவசர விளக்கு, தீப்பெட்டி, மின்கலங்கள், மருத்துவ கட்டு, உலர்ந்த உணவு வகைகள், குடிநீர், மருந்துகள், குளுகோஸ் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய அவசர உதவி பெட்டகத்தை தயாராக வைத்திருக்க வேண்டும்.

பலத்த காற்று காரணமாக ஆஸ்பெஸ்டாஸ் மற்றும் தகடுகளாலான மேற்கூரைகள் பறந்து விழுவதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால் மொட்டை மாடிகளில் நின்று வேடிக்கை பார்க்க வேண்டாம்.

கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைக்கவும். ஆபத்தான இடங்களிலும், நீர்நிலைகளுக்கு அருகிலும் செல்ஃபி எடுப்பதை அறவே தவிர்க்க வேண்டும். மரத்தடியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம். புயலின் காரணமாக பலத்த காற்றுடன் அதி கனமழை பெய்யும். இதனால், மின் கம்பங்கள், மின் கம்பிகள், மரங்கள் விழுவதற்கு வாய்ப்புள்ளதால், பொது மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தேவையில்லாமல் வெளியில் வருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

புயல் தொடர்பான எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பாக இருக்க வேண்டும். அவசர உதவிக்கு மாநில அவசரகால செயல்பாட்டு மையம் – 1070, வாட்ஸ் அப் எண் – 94458 69848, மாவட்ட அவரகால செயல்பாட்டு மையம் – 1077 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in